இதன் மூலம் உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அதிக அளவிலான காடு வளர்ப்பு மற்றும் வனப் பாதுகாப்பு முயற்சிகளின் வெற்றியை இது பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
உலகளவில் மொத்த வனப் பரப்பளவில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது பற்றி பேசியுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், நம் நாடு இந்த பட்டியலில் 10-வது இடத்திலிருந்து 9-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது நிலையான வன மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு “பெரிய சாதனை” செய்திருப்பதை குறிக்கிறது. மரம் நடும் பிரச்சாரங்களில், குறிப்பாக ‘Ek Ped Ma Ke Naam’ முயற்சியின் கீழ், அதிகரித்து வரும் பொதுமக்களின் பங்களிப்பும், மாநில அரசுகளின் பெரிய அளவிலான இயக்கங்களும் இந்த வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
இது குறித்து தனது எக்ஸ் அக்கவுண்ட்டிலிருந்து போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ள பூபேந்தர் யாதவ், “அனைத்து இந்தியர்களும் மகிழ்ச்சியடைய ஒரு காரணம் இங்கே. முந்தைய மதிப்பீட்டில் வனப்பகுதியின் அடிப்படையில் உலக அளவில் 10வது இடத்தில் இருந்த நம் நாடு தற்போது 9-வது இடத்தை பிடித்துள்ளது.
வருடாந்திர அடிப்படையில் வனப் பரப்பளவு அதிகரிப்பில் உலகளவில் நம் நாடு 3-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. Global Forest Resource Assessment 2025 பாலியில் FAO-ஆல் தொடங்கப்பட்டுள்ளது” என கூறி உள்ளார். உலகின் மொத்த வனப்பகுதி 4.14 பில்லியன் ஹெக்டேராக தற்போது இருப்பதாகவும், இது பூமியின் நிலப்பரப்பில் சுமார் 32 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளதாகவும் FAO-வின் அறிக்கை தெரிவித்துள்ளது. தவிர, இதில் பாதிக்கும் மேற்பட்ட வனப்பகுதி (54 சதவீதம்) ரஷ்யா, பிரேசில், கனடா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டுமே குவிந்துள்ளன.
இந்த 5 நாடுகளுக்கு அடுத்து ஆஸ்திரேலியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை தொடர்ந்து உலகின் டாப்10 காடுகள் நிறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா ஒன்பதாம் இடத்தில் உள்ளது. இதனிடையே 2015 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு இடையில் சீனா ஆண்டுக்கு 1.69 மில்லியன் ஹெக்டேர் வனப் பரப்பளவில் ஆண்டுதோறும் காடுகளின் பரப்பளவு அதிகரிப்பில் அதிகபட்ச அளவை பதிவு செய்தது. இதை தொடர்ந்து ரஷ்ய கூட்டமைப்பு 9,42,000 ஹெக்டேர் மற்றும் இந்தியா 1,91,000 ஹெக்டேர் வனப் பரப்புடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
குறிப்பிடத்தக்க வன விரிவாக்கம் செய்துள்ள பிற நாடுகளில் துருக்கி (1,18,000 ஹெக்டேர்), ஆஸ்திரேலியா (1,05,000 ஹெக்டேர்), பிரான்ஸ் (95,900 ஹெக்டேர்), இந்தோனேசியா (94,100 ஹெக்டேர்), தென்னாப்பிரிக்கா (87,600 ஹெக்டேர்), கனடா (82,500 ஹெக்டேர்) மற்றும் வியட்நாம் (72,800 ஹெக்டேர்) ஆகியவை அடங்கும். அதே போல 1990 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு இடையில் வனப்பகுதி அதிகரிப்பைப் பதிவு செய்த ஒரே பிராந்தியம் ஆசியா என்று அறிக்கை காட்டுகிறது. இதற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முக்கிய காரணமாகும்.
அறிக்கையின்படி, உலகின் 20 சதவீத காடுகள் இப்போது சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன, அதே நேரத்தில் 55 சதவீத காடுகள் நீண்டகால திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. உலகளவில், வருடாந்திர நிகர வன இழப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. 1990-களில் 10.7 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 2015-2025 ஆம் ஆண்டில் 4.12 மில்லியன் ஹெக்டேராக இது குறைந்துள்ளது.
October 26, 2025 7:29 AM IST

