Last Updated:
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கிரிக்கெட்டில் இந்தியா நம்பர் 1 அணி. ஆனால் அதன் செயல்பாடுகள் தரக்குறைவாக உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.
துபாயில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இருப்பினும் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி வழங்கவிருந்ததால் இந்திய அணி வீரர்கள் மறுத்து புறக்கணிப்பு செய்தனர்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணி வீரர்கள் கோப்பை இல்லாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரான நக்வி, கோப்பை வழங்கும் வழக்கமான விழாவை நடத்த அனுமதிக்க மறுத்துவிட்டார். மேலும், ACC அதிகாரிகளை அழைத்து கோப்பை மற்றும் பதக்கங்களை மைதானத்தில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டார்.
பின்னர் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தின்போது மொஹ்சின் நக்வியின் செயல்பாடுகளுக்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திடம் நக்வி ஒப்படைத்ததாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் அவ்வாறு மொஹ்சின் நக்வி செய்யவில்லை என்றும், ஆசிய கோப்பையை தனது அலுவலகத்தில் நக்வி வைத்திருப்பதாகவும், வேண்டும் என்றால் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அங்கு வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என நக்வி கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கிரிக்கெட் உலகில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியதாவது-
கிரிக்கெட்டில் இந்திய அணி நம்பர் ஒன் அணியாக உள்ளது. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் 3 ஆம் தரமாக இருக்கின்றன. மொஹ்சின் நக்வி கோப்பையை வழங்குவதற்காக வந்தார். அதனை பெறுவதற்கு இந்திய அணி வீரர்கள் மறுத்தால் உலகின் பார்வையில் அவமானப்படுவார்கள். அவர்களிடம் கோப்பையை வழங்கக் கூடாது.
October 02, 2025 5:05 PM IST


