பிகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான ’மகாகத்பந்தன்’ கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டுவதில் இழுபறி நீடித்து வந்தது.
வேட்புமனுத் தாக்கல் முடிவடைய இருந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் தாங்களாகவே வேட்புமனுத் தாக்கல் செய்ததால் கூட்டணிக்குள் குழப்பம் நிலவியது.
தொடர்ந்து நான்கு முறை பிகார் முதலமைச்சராக இருந்து வரும் நிதிஷ் குமாரை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியிருந்தாலும், வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் உடன்பாடு ஏற்படாததால் மகாகத்பந்தன் கூட்டணியில் பூசல் நிலவி வந்தது.
மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்பதில் காங்கிரஸ் கட்சி சுணக்கம் காட்டியதே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டதற்கு காரணமாகப் பார்க்கப்பட்டது. தற்போது தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளராக மகாகத்பந்தன் கூட்டணி அறிவித்துள்ளதால் கூட்டணியில் நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், தேஜஸ்வி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 75 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், மகாகத்பந்தன் கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களில் 12 இடங்கள் குறைந்ததால் நூலிழையில் ஆட்சியைப் பறிகொடுத்தது.
அப்போது அதிக இடங்களைப் பெற தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தாமதப்படுத்தியதே தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டதற்கு காரணமாகக் கூறப்பட்டது. அதேபோன்ற நிலை தற்போதும் ஏற்படக் கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக தேஜஸ்வி காய்களை நகர்த்தி வருகிறார்.
2020 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வாரிசாகவும், லாலு குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் கருதப்பட்ட தேஜஸ்வி, வேலையில்லா திண்டாட்டம், இளைஞர்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்ததால் தற்போது பிகார் அரசியலை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
தேஜஸ்வியின் மூத்த சகோதரர் தேஜ் பிரதாபின் தனிப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்படுத்திய சர்ச்சைகள் போன்று குடும்பத்தில் அவ்வப்போது பிரச்னைகள் சுழன்றடித்த போதிலும் கட்சியின் செயல்பாடுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தேஜஸ்வி தலைமை உறுதிசெய்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது தேஜஸ்வி துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
துணை முதலமைச்சராக 17 மாத காலமே பணியாற்றிய தேஜஸ்வி திறமையான அமைச்சர் என்ற நற்பெயரை பெற்றார். பின்னர், ஊழல் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.
அதன்பின் நிதிஷ் குமார் ஆட்சியின் ஊழல் தரவுகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சவால் விடுத்து வருகிறார் தேஜஸ்வி. அதேநேரம், ’மகாகத்பந்தன்’ கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீண்ட அனுபவம், ஆட்சி அதிகாரத்துடன் தேர்தலை சந்திக்கும் நிதிஷ்குமாரை இளம் தலைவரான தேஜஸ்வி வீழ்த்துவாரா என்பது நவம்பர் 14 ஆம் தேதியன்று தெரியவரும்.
October 25, 2025 3:28 PM IST

