Last Updated:
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவின் எதிரிகள் எப்போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால், ஆயுதப் படைகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நம் நாட்டின் அதிரடியான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு இதுவரை இல்லாத ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மேலும், இதனால் இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு அத்துமீறலையும் செய்வதற்கு முன்பு இனி பாகிஸ்தான் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவின் எதிரிகள் எப்போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால், ஆயுதப் படைகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அதேபோல், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது” என்று ராஜ்நாத் சிங் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக ஏதேனும் தவறான விஷயங்களில் ஈடுபட்டால் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். “நம் விமானிகள் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பலத்தை நிரூபிக்கும் ஒரு டெமோவை மட்டுமே காட்டினர். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் தங்கள் உண்மையான பலத்தை வெளிப்படுத்துவார்கள்” என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். இந்திய ஆயுதப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், எதிரிகளின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க எப்போதும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தினார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதில் ஆயுதப் படைகளின் பங்கையும் அமைச்சர் எடுத்துரைத்தார். “நமது முப்படை வீரர்கள் எல்லைகளைப் பாதுகாப்பவர்கள் மட்டுமல்ல, தேசத்தைக் கட்டியெழுப்பும் முன்னோடிகளும்கூட. இந்த நூற்றாண்டு நம்முடையது; எதிர்காலம் நம்முடையது, மேலும் நாம் தன்னம்பிக்கையுடன் எடுத்துள்ள முன்னேற்ற நடவடிக்கைகளுடன், நமது ராணுவம் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் சிறந்த ராணுவமாக மாறும்” என்று நம்புவதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
தொடர்ந்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்பு ரீதியிலான தயார்நிலையை மேலும் மேம்படுத்த எல்லையைத் தாண்டி மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் அடையாளமாக பரக்கானாவின் முக்கியத்துவத்தை ராஜ்நாத் சிங் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஜெய்சால்மர் போர் நினைவுச் சின்னத்திலும் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அங்கு நினைவுச் சின்னத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள போர் கோப்பைகள் மற்றும் கலைப்பொருட்களின் விரிவான தொகுப்பு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. அவை பல்வேறு மோதல்களின் களங்களில் இந்திய ராணுவத்தினுடைய வீரத்தின் வரலாற்று அடையாளங்களாக உள்ளன.
October 24, 2025 8:53 PM IST
“இந்தியாவுக்கு எதிராக அத்துமீறும் முன்பு பாகிஸ்தான் இனி ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும்” – ராஜ்நாத் சிங்


