பிராந்தியங்களுக்கு இடையிலான விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை முக்கிய பெருநகரங்களுடன் விமான போக்குவரத்து மூலம் இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி சமீபத்தில் ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். இதில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் வணிக நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிநவீன விமான நிலையம் ஏற்கனவே இருக்கும் மும்பை விமான நிலையத்தின் மீதான அழுத்தத்தை கணிசமாக குறைத்து, ஒரு முக்கிய விமான மையமாக செயல்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனிடையே நொய்டா சர்வதேச விமான நிலையம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையம் திறக்கப்படுவதில் இருந்து 45 நாட்களுக்குள் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் எனவும், முதற்கட்டத்தில், இது சுமார் 10 இந்திய நகரங்களை இணைக்கும் என்றும், அதன் பின்னர் சர்வதேச விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு முழுவதும், பல புதிய பிராந்திய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன அல்லது விரிவுபடுத்தப்பட்டுள்ளன, பல நகரங்களுக்கு நேரடி விமானங்களை வழங்குகின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் வர்த்தகம், சுற்றுலா மற்றும் இணைப்பு சிறப்பாக இருக்கிறது.
பீகார் மாநிலத்தின் பூர்னியா இப்போது இண்டிகோ மற்றும் ஸ்டார் ஏர் மூலம் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செயல்பாடுகள் செப்டம்பர் 15 அன்று தொடங்கியது.
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹின்டன் விமான நிலையம் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, கோவா, வாரணாசி, பாட்னா, இந்தூர் மற்றும் அகமதாபாத் ஆகிய முக்கிய 9 நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் கடந்த ஜூலை மாதம் வணிக விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் தொடங்கியது.
ஒடிசாவில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் ஜனவரி 1 முதல் டேராடூன், இந்தூர் மற்றும் கொச்சிக்கு புதிய விமான சேவைகளை தொடங்கியது.
ஒடிசாவின் ஜார்சுகுடாவில் அமைந்துள்ள வீர் சுரேந்திர சாய் விமான நிலையம் (VSSA) ஹைதராபாத், லக்னோ மற்றும் ராய்ப்பூர் நகரங்களுக்கான புதிய விமானங்களைச் சேர்த்தது. இந்த வழித்தடங்களில் இயக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்டார் ஏர் ஆகிய நிறுவனங்கள் மாநில அரசுடன் கூட்டு சேர்ந்தன. இந்த சேவை ஜனவரியில் தொடங்கியது.
கடந்த மார்ச் மாதத்தில் போர்பந்தர் மற்றும் மும்பை இடையே விமான சேவையை தொடங்கியதன் மூலம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது உள்நாட்டு சேவைகளை விரிவுபடுத்தியது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆன்மீக நகரமான அயோத்தியை டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய 4 முக்கிய நகரங்களுடன் இணைக்கும் சிறப்பு தினசரி நேரடி விமானங்களை அறிமுகப்படுத்தியது. தீபாவளி பண்டிகையையொட்டி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த விமானங்கள் படிப்படியாக இயக்கப்படுகின்றன.
கடந்த மார்ச் மாதத்தில் ராஜஸ்தானின் கிஷன்கர் மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகரங்களுக்கு இடையிலான தினசரி விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் அறிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் ஹிசார் மற்றும் அயோத்தி இடையே நேரடி விமான சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
October 19, 2025 3:45 PM IST

