Last Updated:
பிரசாந்த் கிஷோர், புதிய கட்சியான ஜன் சுராஜை கண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அஞ்சுவதாக விமர்சித்துள்ளார்.
பிகாரில் பாஜகவின் அழுத்தம் காரணமாக, தங்கள் கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர்கள் கடைசி நாளில் வேட்புமனுவை திரும்பப் பெற்றதாக ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார்.
243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், 11ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
முன்னதாக இரண்டு கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ள நிலையில், கடைசி நாளில் ஜன் சுராஜ் கட்சியை சேர்ந்த முதுர் ஷா, சத்ய பிரகாஷ் திவாரி, சசி சேகர் சின்ஹா ஆகிய 3 பேர் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், புதிய கட்சியான ஜன் சுராஜை கண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அஞ்சுவதாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, வேட்புமனுவை வாபஸ் பெற தனாபூர் வேட்பாளர் முதுர் ஷாவுக்கு பாஜக அழுத்தம் கொடுத்ததாகவும், அதன்பொருட்டு அமித் ஷாவுடன் முதுர் ஷா இருக்கும் புகைப்படம் கசியவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் முறையிட இருப்பதாக கூறியுள்ள பிரசாந்த் கிஷோர், எத்தனை வேட்பாளர்களை பாஜக இழுத்தாலும், தேர்தலில் கடுமையாக போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
October 22, 2025 9:19 PM IST


