தில்லி பாஜக தலைமையகத்தில் கட்சியின் தோ்தல் அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 14) பிரதமா் மோடி வெளியிட்டார். பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, யாரையும் பயமுறுத்துவதற்காகவோ அல்லது யாருடைய தகுதியையும் குறைப்பதற்காகவோ நான் முடிவுகளை எடுப்பதில்லை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவே முடிவுகளை எடுக்கிறேன். இதுவரை பார்த்தவையெல்லாம் ட்ரெய்லர் தான். 2047-ஆம் ஆண்டு வரையிலான திட்டங்கள் நிறைய பாக்கியுள்ளன.
கரோனா பெருந்தொற்று பேரிடரை 2 முறை எங்களது அரசு கையாண்டுள்ளது. எந்த விதத்தில் பார்த்தாலும், காங்கிரஸ் மாடலை விட பாஜக மாடல் சிறப்பாகச் செயல்படுகிறது என்றார்.
மோடியின் உத்தரவாதம் – பிரதமர் அளித்துள்ள விளக்கம்: ’மோடியின் உத்தரவாதம்’ என்ற முழக்கம் பாஜக தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து பிரதமர் கூறியதாவது, ”மோடியின் உத்தரவாதம் என்பது. என் வாக்குறுதிகளுக்கு, நான் முழு பொறுப்புபேற்றுக் கொள்வதை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. பிற அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரசாரங்களில் அவர்களால் அத்தகைய பொறுப்பேற்க முடியவில்லை” எனக் கூறினார்.

