பெர்த்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்திய அணி முதலில் விளையாடி 26 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. மழையின் காரணமாக ஆட்டம் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர்.
சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, ரசிகர்களை ஏமாற்றினார். 14 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் வீழ்ந்தார்.
ஹேசில்வுட் பந்துவீச்சில், மேட் ரென்ஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் விளையாட வந்த விராட் கோலியும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 8 பந்துகளைச் சந்தித்த அவர், மிட்செல் ஸ்டார்க் பந்தில் கூப்பர் கானொலியிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.
3-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில்லுடன், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் கில்லை, நேதன் எல்லிஸ் ஆட்டமிழக்கச் செய்தார். 18 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் அவர் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
ரன்கள் சேர்க்க முற்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்துகளில 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுலும், அக்சர் படேலும் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். அக்சர் 38 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில், குனேமன் பந்தில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் மட்டும் சற்று அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்தவர்களில் வாஷிங்டன் சுந்தர் 10, ஹர்ஷித் ராணா ஒரு ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய நித்திஷ் ரெட்டி 11 பந்துகளில் 19 ரன்கள் (2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மழையின் குறுக்கீடு காரணமாக ஆடுகளம் இந்திய வீரர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஓவன், குனேமன், ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். நேதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். மழையின் குறுக்கீடு காரணமாக டிஎல்எஸ் முறைப்படி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 26 ஓவர்களில் 131 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷும், டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர். அதிரடியாக விளையாட முற்பட்ட டிராவிஸ் ஹெட் 8 ரன்களில், அர்ஷ்தீப் பந்தில் ஹர்ஷித் ராணாவிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த மேத்யூ ஷார்ட் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் பந்தில் ரோஹித்திடம் பிடிகொடுத்தார்.
3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் மார்ஷும், ஜோஷ் பிலிப்பும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 99-ஆக இருந்தபோது பிலிப், வாஷிங்டன் சுந்தர் பந்தில் வீழ்ந்தார்.
பின்னர் வந்த மேட் ரென்ஷாவும், மார்ஷும் நிதானத்துடன் விளையாடி அணி வெற்றி இலக்கை எட்ட உதவினர்.
21.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 46 ரன்களும், மேட் ரென்ஷா 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னாள் கேப்டன்களை முடக்கிய ஸ்டார்க், ஹேசில்வுட்: ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து நட்சத்திர வீரர்களாக
வலம் வரும் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மாவையும், விராட் கோலியையும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது அபாரமான பந்துவீச்சால் கட்டுப்படுத்தினர்.
ஸ்டார்க் பந்தில் ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்களைச் சேர்த்த ரோஹித் சர்மா, அதன் பின்னர் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அதைப் போலவே, விராட் கோலியை தனது அற்புதமான பந்துவீச்சால் முடக்கினார் மிட்செல் ஸ்டார்க். ஆட்டத்தின் 5-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். அந்த ஓவர் முழுவதும் ரன் எடுக்காமல் மெய்டன் கொடுத்தார் விராட் கோலி. அதன் பின்னர் ஸ்டார்க் வீசிய 7-வது ஓவரின் முதல் பந்திலேயே விராட் கோலி ஆட்டமிழந்தார்.
4 முறை குறுக்கிட்ட மழை: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது மழை 4 முறை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்திய அணி 8.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது மழை வந்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டு ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் மீண்டும் மழையால் தடைபட்டது.
மழை நின்ற நிலையில், ஆட்டம் தொடங்கியபோது ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 14.2 ஓவர்களில் மீண்டும் மழை குறுக்கிட்டு சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் ஆட்டம் 32 ஓவர்களாக குறைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. மழை நின்றதும் ஆட்டம் சிறிது நேரம் கழித்து தொடங்கியபோது ஆட்டம் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணியின் பேட்டிங்கின்போது மட்டும் 4 முறை மழை குறுக்கிட்டது.
500-வது போட்டியில் விளையாடிய ரோஹித்: நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்று விளையாடினார். இது அவர் பங்கேற்று விளையாடும் 500-வது சர்வதேச போட்டியாகும்.
இதன்மூலம் 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் (664 சர்வதேச போட்டிகள்), விராட் கோலி (551 சர்வதேச போட்டிகள்), எம்.எஸ்.தோனி (535 சர்வதேச போட்டிகள்), ராகுல் திராவிட் (504 சர்வதேச போட்டிகள்) ஆகியோர் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளனர்.
ஆட்டநாயகன்: 45 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்ஷ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நித்திஷ் ரெட்டி அறிமுகம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் நித்திஷ் குமார் ரெட்டி அறிமுகமானார். போட்டிக்கு முன்னதாக, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, நித்திஷ் குமார் ரெட்டியிடம் தொப்பியைக் கொடுத்து அணிக்கு வரவேற்றார். இதேபோல் ஆஸ்திரேலிய அணியில் மிச்செல் ஓவன், மேத்யூ ரென்சா ஆகியோரும் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி விளையாடினர்.
முதல் தோல்வி: 2025-ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பெறும் முதல் தோல்வி இதுவாகும்.இதற்கு முன்பு 1978-ல் அக்டோபர் 13-லும், 1991-ல் அக்டோபர் 23-லும், 1980-ல் டிசம்பர் 18-லும் இந்திய அணி அந்த ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக தோல்வி கண்டிருந்தது. அதாவது அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றிருந்த அணி, ஆண்டின் கடைசியில் முதல் தோல்வியைப் பெற்றிருந்தது.
அடிலெய்டில் 2-வது போட்டி: இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2- வது போட்டி அடிலெய்டு மைதானத்தில் வரும் அக்டோபர் 23-ம் தேதி நடைபெறவுள்ளது.