வாஷிங்டன்: லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவுக்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தல் நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக போதைப் பொருட்களை கடத்திவந்த 6 அதி விரைவு படகுகளை அமெரிக்க படைகள் கரீபியன் கடலில் சுட்டு வீழ்த்தின. இந்த படகுகள் வெனிசுலாவில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் கரீபியன் கடல் பகுதியில் இரவு நேரத்தில் ஒரு நீர்மூழ்கி கப்பல், பாதியளவு தண்ணீரில் மூழ்கியபடி வேகமாக சென்றுள்ளது. அதில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அது போதைப் பொருட்கள் கடத்தும் நீர்மூழ்கி கப்பல் என உறுதி செய்யப்பட்டவுடன் அதை நடுக்கடலில் அமெரிக்க படைகள் குண்டு வீசி தகர்த்தன. இந்த தாக்குதலில் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய இருவர் உயிருடன் பிடிபட்டனர். அவர்கள் ஈக்குவடார் மற்றும் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது.
25,000 பேர் இறந்திருப்பர்: இந்த தாக்குதல் வீடியோவை ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் பகிர்ந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது:
இந்த போதைப் பொருட்கள் நுழைந்திருந்தால், 25,000 அமெரிக்கர்கள் இறந்திருப்பர். கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரும் வழக்கு விசாரணைக்காக அவர்களின் சொந்த நாடான ஈக்குவடார் மற்றும் கொலம்பியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஏற்றி வந்த நீர்மூழ்கி கப்பல் எந்த நாட்டில் இருந்து புறப்பட்டது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.
இந்த நீர்மூழ்கி கப்பல் ரகசிய கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு கொலம்பியாவிலிருந்து மத்திய அமெரிக்கா அல்லது மெக்சிகோவுக்கு போதைப் பொருள் கடத்தலுக்கு நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.