அயோத்தி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி நகரில் உத்தர பிரதேச அரசு சார்பில் தீபோற்சவ விழாவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார்.
“இதே அயோத்தி நகரில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் அங்கம் வகித்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அன்று மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி. ராமரை புராணக்கதை உடன் ஒப்பிட்டது காங்கிரஸ் கட்சி. முன்னாளில் இங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இன்று அதே இடத்தில் நாம் தீபங்களை ஒளிர்க்க செய்கிறோம்.
இங்கு ஒளிரும் ஒவ்வொரு தீபமும் நமக்கு நினைவுபடுத்துவது ஒன்றே ஒன்றுதான் அது உண்மையை வீழ்த்த முடியாது என்பதுதான். சனாதன தர்ம போராட்டம் 500 ஆண்டுகளாக தொடர்கிறது. அந்தப் போராட்டங்களின் விளைவாக அயோத்தியில் பிரம்மாண்டமான வகையில் தெய்வீக ரீதியாக கோயில் கட்டப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 9-வது தீப உற்சவ விழா தொடங்கியது. இதில் சுமார் 26,17,215 விளக்குகள் ஏற்றப்பட்டன.