கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம் – ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான போட்டி கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் அணி 132.1 ஓவர்களில் 419 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 173 ரன்களும், சாஹில் ராஜ் 77 ரன்களும் சேர்த்தனர்.
தமிழக அணி 50.4 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது. 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 27 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை விளையாடிய தமிழக அணி 79 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 80, ஷாருக் கான் 37, பாபா இந்திரஜித் 22 ரன்கள் சேர்த்தனர்.
ஜார்க்கண்ட் அணி தரப்பில் ரிஷவ் ராஜ் 4, அனுகுல் ராய் 3, சாஹில் ராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் அணி 7 புள்ளிகளை பெற்றது.