கிறைஸ்ட்சர்ச்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் டி20 தொடரின் முதல் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆல்ரவுண்டரான சேம் கரண் 35 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் விளாசினார்.
ஜேக்கப் ஃடபி வீசிய கடைசி ஓவரில் மட்டும் சேம் கரண் 19 ரன்களை விளாசி அசத்தினார். ஜாஸ் பட்லர் 25 பந்துகளில், 29 ரன்களும் ஹாரி புரூக் 14 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணியின் பேட்டிங் முடிவடைந்ததும் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 2-வது போட்டி இதே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.