மும்பை: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கண்டனம் தெரிவித்துள்ளது.
“பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக பிசிசிஐ நிற்கும். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம்” என பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முத்தரப்பு தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான்: இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான முத்தரப்பு டி20 போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகி உள்ளது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு மாற்றாக ஜிம்பாப்வே விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 17-ம் தேதி தொடங்குகிறது. இதில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே விளையாடுகின்றன.