Last Updated : 15 Apr, 2024 04:26 AM
Published : 15 Apr 2024 04:26 AM
Last Updated : 15 Apr 2024 04:26 AM

மொகதிசு: கடத்தப்பட்ட வங்கதேச சரக்கு கப்பலை, ரூ.42 கோடி பிணையத் தொகையை பெற்றுக் கொண்டு சோமாலிய கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.
வங்கதேசத்தை சேர்ந்த சரக்கு கப்பல் எம்.வி.அப்துல்லா. மொசாம்பிக் நாட்டில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கடந்த மாதம் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை சோமாலியா அருகே கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இந்த கப்பலை விடுவிப்பதற்கு, 5 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.42 கோடி) பேரம் பேசினர்.
மத்திய கிழக்கு பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கடற்கொள்ளையர்கள் கேட்ட பிணையத் தொகையை கப்பல் நிறுவனம் அளித்து கப்பலை மீட்டதாக தெரிகிறது. இந்த பணத்தை சரிபார்த்து கடற்கொள்ளையர்கள் தங்களுக்குள் பிரித்து எடுத்துக்கொண்டபின் எம்.வி.அப்துல்லா கப்பலை விட்டு வெளியேறியுள்ளனர். இச்சம்பவத்துக்கு சோமாலிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
கடற்கொள்ளையர்களுக்கு பிணையத் தொகை அளிக்கப்பட்டது, அவர்களை மேலும் ஊக்குவிக்கும், ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கையை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வர் என கடல்சார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
FOLLOW US


