கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா பகுதியில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. நேத்ராவதி ஆற்றங்கரையோரம் உள்ள புகழ்பெற்ற இக்கோவிலின் முன்னாள் தூய்மைப் பணியாளரான சின்னையா, கடந்த ஜூன் மாதம் தட்சின கன்னடா காவல் நிலையத்தில் சரணடைந்து அளித்த வாக்குமூலம், ஒட்டுமொத்த கர்நாடகாவையே கதிகலங்க வைத்தது.
தர்மஸ்தலா கோயிலைச் சுற்றி, 1995 முதல் 2014 வரையான காலத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்திருப்பதாகக் கூறி போலீசாரை அலற விட்டுள்ளார். உண்மையிலேயே தர்மஸ்தலா கோயிலை சுற்றி பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா? என பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 2003ல் தர்மஸ்தலா சென்ற தனது மகள் அதன் பின்னர் காணாமல் போனதாக ஜூன் 15ல் பெண் ஒருவர் அளித்த புகார் அதிகாரிகளுக்கு இன்னும் அழுத்தம் கொடுத்தது.
கர்நாடகா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய அப்புகார் தொடர்பாக விசாரிக்க, 20 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சின்னையாவை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து வந்து தர்மஸ்தலா குளத்தை தவிர்த்து, நேத்ராவதி ஆற்றுக்கு அருகிலுள்ள காட்டில் 17 இடங்களில் உடல்களை தோண்டும் பணி சுமார் 20 நாட்கள் நீடித்தது. ஆனால், அதில் எந்தவொரு பெண்ணின் எலும்புக் கூடும் சிக்கவில்லை. மாறாக, ஓரிடத்தில் மட்டும் சிதைந்த நிலையில் எலும்புக் கூடு கிடைத்தது. இருந்தபோதும், அந்த உடலின் மண்டை ஓடும் கிடைக்கவில்லை.
தர்மஸ்தலாவை சுற்றி 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக புகாரளித்திருந்த நிலையில் எந்த பெண்ணின் எலும்புகூடும் சிக்காததால் புகாரளித்த சின்னையா பக்கம் அதிகாரிகளின் சந்தேக பார்வை திரும்பியது. உடனே, சின்னையாவை பிடித்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டதில், அவர் அளித்தது திட்டமிட்ட பொய் புகார் என அம்பலமானது.
அதேநேரம் தர்மஸ்தலாவில் கண்டெடுக்கப்பட்டது என்று கூறி நீதிமன்றத்தில் சின்னையாவால் ஒப்படைக்கப்பட்ட மண்டை ஓடு 40 ஆண்டு பழமையானது என்றும் தடயவியல் ஆய்வறிக்கையில் தெரியவந்தது. மேலும் அதில் வார்னிஷ் பூசப்பட்டிருப்பதால், மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து அந்த மண்டை ஓடு வாங்கப்பட்டிருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டது. சின்னையா அளித்த புகாரும் பொய். அவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்த மண்டை ஓடும் போலி. ஏன் இப்படியொரு சம்பவத்தில் சின்னையா ஈடுபட வேண்டும். நாட்டையே உலுக்கும் என தெரிந்தும் சின்னையா இப்படியொரு பொய் புகாரை அளிக்க என்ன காரணம்? இப்படி பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
அப்போதுதான் சின்னையா தனி ஆள் இல்லை என்பதும், அவரை முக்கிய புள்ளிகள் சிலர் ஏவி பொய் புகாரளிக்க வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தனிப்படை குழு சின்னையாவை ஏவிய முக்கிய தலைகளுக்கு தற்போது செக் வைத்துள்ளது. புகாரளிப்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த சின்னையாவை, ஒரு கும்பல் தொடர்பு கொண்டு உள்ளது. பின்னர் திட்டமிட்டு சின்னையாவை தர்மஸ்தலாவுக்கு அழைத்து சென்று வனப்பகுதியில் ஒரு மண்டை ஓடு மற்றும் சில எலும்பு கூடுகளை புதைத்து உள்ளனர்.
பின்னர் தர்மஸ்தலாவில் இருந்து டில்லிக்கு சின்னையாவை காரில் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் எப்படி பேச வேண்டும்? போலீசார் முன்பு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இப்படி ஒவ்வொரு நகர்வுகளையும் நரி மூளையாக திட்டமிட்டு நேக்காக சின்னையாவை நகர்த்தி பொய் புகார் அளிக்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது. போலீஸ் முன்பு வாக்குமூலம் அளித்தபோது 10 முதல் 12 பேரின் பெயர்களை, சின்னையா கூறி இருந்தார்.
தன்னிடம் இருந்த மொபைல் போனை, அந்த கும்பல் வாங்கி கொண்டதாகவும் சின்னையா கூறி உள்ளார். அவரது மொபைல் போனின் நம்பரை பெற்ற அதிகாரிகள் சின்னையா யார், யாருடன் பேசினார். யாருக்கு குறுந்தகவல் அனுப்பினார் என்பதை விசாரித்து வருகின்றனர். இதுதவிர சின்னையாவின் வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகள், பயணம் குறித்த தகவல்களையும் விசாரித்து வருகின்றனர். இதேபோல் தர்மஸ்தலா சென்ற மகள் அனன்யா பட் காணாமல் போனதாக, பொய் புகார் அளித்த சுஜாதா பட்டையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே சின்னையா குறித்து அவரது மனைவிகள் பல திடுக்கிடும் தகவல்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர். சின்னையா இதுவரை மூன்று திருமணங்கள் செய்ததாக கூறப்படும் நிலையில், பணத்திற்காக அவர் என்ன வேண்டுமென்றாலும் செய்வார் என முன்னாள் மனைவி ரத்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். மற்றொரு புறம் சின்னையா தனது இரண்டாவது மனைவி மல்லிகாவுடன் கடந்த 11 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்ட சிக்கரசம்பாளையத்தில் வசித்து வந்ததும், இரண்டரை மாதத்திற்கு முன்பு அவர் காணாமல்போனதும் தெரியவந்துள்ளது.
அவர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக அவரது மனைவி மல்லிகா தெரிவித்துள்ளார். அதேநேரம், தர்மஸ்தலா கோயில் பகுதியில் உடல்கள் புதைக்கப்பட்டது குறித்து சின்னையா தங்களிடம் இதுவரை கூறியதில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சின்னையாவின் சகோதரரான ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தான் பீமா என்றழைக்கப்படும் சின்னையாவிற்கு அடைக்கலம் கொடுத்ததாக ‘ராஷ்ட்ரிய இந்து ஜாக்ரன் வேதிகா’ என்ற அமைப்பின் தலைவரான மகேஷ் ஷெட்டி திமரோடி விசாரணை வலையத்திற்குள் சிக்கியுள்ளார். சின்னையா, மகேஷ் ஷெட்டி வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தின் உஜிரே பகுதியில் உள்ள மகேஷ் ஷெட்டி வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவரது வீட்டில் சின்னையா தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டதாகவும் தெரிகிறது.
விசாரணையின் முடிவில், தர்மஸ்தலா விவகாரம் தொடர்பாக சின்னையாவை டெல்லியில் சந்தித்தது யார்? திட்டமிட்டு எலும்புக் கூடுகளை புதைத்து வைத்து பொய் புகாரளிக்கத் தூண்டியது யார்? நாட்டையே உலுக்கும் என தெரிந்தும் இப்படியொரு குற்ற நாடகத்தை அரங்கேற்றியது அரசியல் பின்புலத்திற்காகவா? அதில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு மர்மங்கள் வெட்ட வெளிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
August 26, 2025 3:34 PM IST
விஸ்வரூபம் எடுக்கும் தர்மஸ்தலா கோயில் சம்பவம்.. சிக்கப்போகும் முக்கிய புள்ளி.. விசாரணையில் அதிர்ச்சி!

