பிகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகாரப் பயணத்தை’ மேற்கொண்டார். இந்தப் பயணம் நேற்றோடு (செப்டம்பர் 1ஆம் தேதி) முடிவடைந்தது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக பிகார் மாநிலத்தின் தர்பங்காவில் பேரணி மேற்கொண்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வருவதற்கு முன்பாக அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையின் மீது ஏறிய சிலர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாய் ஆகியோர் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜப்பான் மற்றும் சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியாவுக்குத் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, பிகார் பாஜக கூட்டத்தில் காணொளி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “என் தாயார் அரசியலில் எதுவும் செய்யவில்லை. ஆனால் பிகாரில் ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் மேடையில் அவமதிப்புக்கு உள்ளானார். அவர்கள் என் அம்மாவை மட்டும் இழிவுபடுத்தவில்லை. நாட்டில் உள்ள தாய்மார்களை, சகோதரிகளை இழிவுபடுத்தி உள்ளனர்” எனப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்டு பிகார் மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உட்பட பலர் கண்ணீர் சிந்தினர். இந்த வீடியோவும் தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 4ஆம் தேதி பிகார் மாநிலம் முழுவதும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதி காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தின் போது, ரயில்வே மற்றும் அவசர சேவைகள் பாதிக்கப்படாது என்று பாஜக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், என்.டி.ஏ. கூட்டணி பிகார் மாநிலத் தலைவர்கள் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பாஜக மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், “பிகாரின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இன்று பிரதமர் நரேந்திர மோடி நிதி உதவி அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை 20 லட்ச தாய்மார்களும், சகோதரிகளும் கேட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாய் குறித்து இழிவாகப் பேசியதைவிட பெரும் பாவம் எதுவும் கிடையாது. ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் பிகாரை அவமானப்படுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பிகார் பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தின்போது, எனது தாயை அவமதித்துவிட்டனர். இந்தியத் தாயை அவமதிப்பவர்களுக்கு என் அம்மாவை திட்டுவது ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
என் தாயை இழிவாகப் பேசியபோது என் இதயம் எந்த அளவுக்குக் காயப்பட்டதோ அதைவிட பிகாரின் தாய்மார்கள் இதனால் மன வலியைச் சுமந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை நான் மன்னித்துவிடுவேன். ஆனால், பிகார் மக்கள் ஒருபோதும் எனது தாயை இழிவாகப் பேசியவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
பெண்களால் பிகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனால் அவர்கள் பெண்களைப் பழிவாங்குகிறார்கள். அவர்களின் மன நிலையே பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்பதுதான்.
என் தாயார் அரசியலில் எதுவும் செய்யவில்லை. ஆனால் பிகாரில் ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் மேடையில் அவமதிப்புக்கு உள்ளானார். அவர்கள் என் அம்மாவை மட்டும் இழிவுபடுத்தவில்லை. நாட்டில் உள்ள தாய்மார்களை, சகோதரிகளை இழிவுபடுத்தி உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
September 02, 2025 7:20 PM IST
“செப்டம்பர் 4ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம்..” பிரதமரின் தாயை இழிவாகப் பேசியதைக் கண்டித்து என்டிஏ அறிவிப்பு

