ரஷ்யா: மூன்று ஆண்டுகளைத் தாண்டியும், இன்னும் ரஷ்யா – உக்ரைன் போர் முடிந்தபாடில்லை.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர, ஆரம்பத்தில் புதினை நட்பு ரீதியில் அணுகினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால் எந்தப் பயனும் இல்லை.
இதனால், ‘ரஷ்யா மீது வரி விதிக்கப்படும்’ என்று பயமுறுத்தியும், ‘ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளான இந்தியா, பிரேசில் மீது கூடுதல் வரி விதித்தும்’ அமைதி பேச்சுவார்த்தைக்காக புதினை அலாஸ்காவிற்கு வரவழைத்தார் ட்ரம்ப்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ட்ரம்ப் – புதின், ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்திப்புகளில் தீர்மானிக்கப்பட்ட புதின் – ஜெலென்ஸ்கி சந்திப்பு இன்னும் நடைபெறவில்லை. அதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை. இதனால், ட்ரம்பின் மனம் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும்.

சீனா: கடந்த ஏப்ரல் மாதத்தில் பரஸ்பர வரியை அறிமுகப்படுத்தியதிலிருந்து சீனாவுக்கு மீதான வரி சதவீதத்தை அடுக்கிக் கொண்டே வந்தார் ட்ரம்ப். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீது பதிலடி வரிகளை விதித்து வந்தது.
ஆனால் இந்த நிலை ஜூன் மாதத்திற்குப் பிறகு தலைகீழாக மாறிவிட்டது.
சீனாவுக்கு 145 சதவீதம் வரை வரி விதித்திருந்த அமெரிக்கா, இப்போது அதை 30 சதவீதமாகக் குறைத்துள்ளது.
ரஷ்யாவுடன் வணிகம் செய்வதால் இந்தியா, பிரேசில் மீது கூடுதல் வரி விதித்த போதிலும், ரஷ்யாவின் முக்கிய இறக்குமதி நாடான சீனாவை ட்ரம்ப் தொடவில்லை.
இதற்கு காரணம், சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா தங்களது பெரும்பாலான தயாரிப்புகளின் மூலப்பொருட்களுக்கு சீனாவையே நம்பியிருப்பதால், இப்போதைக்கு சீனாவுக்கு எதிரான எந்தப் பெரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த மாதிரியான சூழலில்தான் மோடி, ஷி ஜின்பிங், புதின் சந்திப்பு நடைபெற்றது.
மேலும், இந்த மூன்று நாடுகளும் வேறொரு வகையிலும் அமெரிக்காவுடன் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுதான் பிரிக்ஸ்.

