Last Updated:
பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை சாடினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மோடி, விளாதிமிர் புதின், ஜிஜின்பிங் சந்திப்பு நடந்தது. Trump இந்தியாவை விமர்சித்தார்.
பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்கு சில நாடுகள் வெளிப்படையாக அளிக்கும் ஆதரவை எப்படி இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இடையே ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை, பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் ஆரத்தழுவி கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து இருவரும் சிரித்துப் பேசியபடி மாநாட்டு அரங்கை நோக்கிச் சென்றனர். அப்போது, பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதினை சீன அதிபர் ஜிஜின்பிங் வரவேற்றுப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி கலந்துரையாடினர். அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஓரமாக நின்றபடி இதை பார்த்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு சில நாடுகளின் வெளிப்படையான ஆதரவை எப்படி இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று பாகிஸ்தானை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார். மாநாட்டிற்குப் பின் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் ஒரே காரில் பயணம் மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் இருதரப்பு பேச்சு நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும், ரஷ்யாவும் மிக கடினமான சூழ்நிலைகளிலும் கூட தோளோடு தோள் நிற்பதாக பெருமிதம் தெரிவித்தார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பு இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறினார். வர்த்தகம், உரங்கள், விண்வெளி, பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததாக தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்தியாவை விமர்சித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். இந்தியா பெருமளவில் அதன் பொருட்களை அமெரிக்காவிடம் விற்கிறது என்றும் ஆனால் குறைந்த அளவு அமெரிக்க பொருட்களையே இந்தியா வாங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். பல 10 ஆண்டுகளாக வர்த்தகத்தில் இந்தியா ஒருதலைப்பட்சமாகவே நடந்து வருவதாகவும் உலகிலேயே அமெரிக்காவிடம் இந்தியாதான் அதிக வரிகளை வசூலிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியா தங்களுடன் ஒருதலைப்பட்சமாகவே வர்த்தகம் வைத்திருப்பதாகவும் வர்த்தக உறவு பேரழிவு என்றும் ரஷ்யாவிடம் அதிகளவில் எண்ணெய் வாங்குவது மட்டுமின்றி ராணுவ தளவாடங்களையும் இந்தியா அதிக அளவில் வாங்குவதாகவும் விமர்சித்துள்ளார். இந்தியா தற்போது குறைந்த அளவில் வரியை குறைத்திருப்பதாகவும் ஆனால் அதை எப்போதோ செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
September 02, 2025 6:50 AM IST
பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்ட சவால் – பிரதமர் மோடி


