Last Updated:
ஆகஸ்ட் 2-ஆம் தேதி மட்டும் 70 கோடி முறைக்கும் அதிகமாக யுபிஐ பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஒரே மாதத்தில் மட்டும் 2000 கோடிக்கும் அதிகமான முறை பணப் பரிமாற்றம் செய்து யுபிஐ சாதனை படைத்துள்ளது. என்பிசிஐ எனப்படும் தேசிய கொடுப்பனவு நிறுவனம் யுபிஐ பணப் பரிமாற்ற முறைகளை நிர்வகித்து வருகிறது.
நாட்டில் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கூகுள் பே, ஜிபே, பேடிஎம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் வழங்கும் தொகை நேரடியாக கடைக்காரர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்வதால், இந்த முறையில் பணத்தைப் பெறுவது இருதரப்புக்கும் எளிதாக அமைகிறது.
சாதாரண கடைகள் முதல் ஷாப்பிங் மால் வரை என பல்வேறு பகுதிகளில் யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தரப்பினரும் மிக எளிதாக யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்கிறார்கள். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2000 கோடி முறை யுபிஐ முறையைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தேசிய கொடுப்பனவு நிறுவனத்தால் 24 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
September 01, 2025 5:07 PM IST


