Last Updated:
இந்த உழவர் சந்தையில் 24 கடைகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களும் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் கடந்த சில வருடங்களாக மூடப்பட்டிருந்த உழவர் சந்தை, மீண்டும் திறப்பு. கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதியான ஆனந்தகிரி பகுதியில் அமைந்து இருப்பதால், காய்கறிகளை சந்தைப்படுத்த விவசாயிகள் யாரும் முன் வராததால், இரண்டு கடைகள் மட்டும் திறப்பு. அதிக பொதுமக்கள் கூடும் இடங்களில் உழவர் சந்தையை மாற்ற விவசாயிகள் கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் மட்டும் செய்யப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதியில் அமைந்துள்ள ஆனந்தகிரி 4வது தெரு பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக உழவர் சந்தை கடந்த 2009 ஆம் வருடம் முதல் துவங்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2017 ஆம் வருடம் விவசாயிகள் யாரும் கடை அமைக்க முன் வராததால் உழவர் சந்தை செயல்பாடின்றி முடங்கியது. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் உழவர் சந்தையானது புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனி, மன்னவனூர் பகுதியை சேர்ந்த 2 நபர்கள் மட்டும் விளை பொருட்களை சந்தைப்படுத்தியுள்ளனர். மீண்டும் நுழைவுவாயில் பகுதியில் உழவர் சந்தை பயன்பாட்டிற்கு வந்ததால் விளை பொருட்களை சந்தைப்படுத்த கொடைக்கானலை சுற்றியுள்ள மலைக்கிராம விவசாயிகள் ஆர்வம் காட்டாமல், அதிக மக்கள் கூடும் இடமான 7 ரோடு பகுதி, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வேளாண் துறை அதிகாரி கூறும் போது இந்த பகுதியில் உழவர் சந்தை அமைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து விழிப்புணர்வு அளித்த நிலையில் மலைக்கிராம விவசாயிகள் யாரும் கடை அமைக்க முன் வரவில்லை என்றும், வரும் நாட்களில் வியாபாரிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
September 01, 2025 12:37 PM IST

