Last Updated:
கர்நாடகா யாத்கிர் மாவட்ட அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், யாத்கிர் மாவட்டத்தில், அந்த மாநிலத்தின் சமூகநலத் துறை அமைச்சகத்தின் கீழ் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் அங்கேயே தங்கி 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 27ஆம் தேதி பள்ளியில் இருந்தபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த மாணவி பள்ளி கழிவறைக்கு சென்றுள்ளார். மாணவி வலியால் துடித்துக்கொண்டே கழிவறைக்குச் சென்றதைக் கண்ட சக மாணவிகள் உடனடியாக ஆசிரியர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் வந்து பார்க்கும்போது, மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும், உடனடியாக அந்த மாணவியையும், குழந்தையையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இந்தத் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், 9 மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவரால் தான் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்த மாணவி தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் அளித்த தகவலின்படி குழந்தை ஏழு மாதத்தில் பிறந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மாணவி, கடும் வயிற்று வலி ஏற்பட்டு கழிவறைக்குச் சென்றதாகவும், அங்கு திடீரென குழந்தை பிறந்ததாகவும் விசாரணையில் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 28 வயது கொண்ட ஒரு நபரை தற்போது கைது செய்துள்ளனர். மேலும், மாணவிக்கு மருத்துவச் சிகிச்சை முடிந்த பின்னர் அவரிடம் இந்த நபர் குறித்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தினரோ, அந்த மாணவியின் சகோதரரோ காவல்துறைக்கு புகார் கொடுக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்து அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் அந்தப் பள்ளியின் முதல்வர், விடுதி காப்பாளர் உள்ளிட்ட நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
August 29, 2025 9:21 PM IST
அரசுப் பள்ளியில் குழந்தையைப் பெற்றெடுத்த 9ஆம் வகுப்பு மாணவி… கர்நாடகாவில் நடந்த பகீர் சம்பவம்


