இது குறித்து யுஐடிஏஐ குறிப்பிட்டதாவது, ஐந்து மற்றும் பதினைந்து வயதிற்குள் உள்ள மாணவர்களின் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை அந்தந்த காலத்திற்கு உட்பட்டுப் புதுப்பிக்க வேண்டும். இதற்காக, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் இணைந்து, மாணவர்களின் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நிலையை UDISE+ (Unified District Information System for Education Plus) பயன்பாட்டுடன் ஒருங்கிணைத்துள்ளது.
“பல பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கடைசி நேரத்தில் ஆதார் புதுப்பிப்புகளுக்காக அவசரப்படுவது பதற்றங்களுக்கு வழிவகுக்கிறது. ஆனால், சரியான நேரத்தில் புதுப்பித்தால், இந்த சிரமங்களைத் தவிர்க்கலாம்” என்று யுஐடிஏஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யுஐடிஏஐ தரவின்படி, நாடு முழுவதும் சுமார் 17 கோடி ஆதார் எண்கள் இன்னும் கட்டாய புதுப்பிப்புக்காக நிலுவையில் உள்ளன. இந்த புதுப்பிப்புகள் இல்லாமல், குழந்தைகள் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், அத்துடன் நீட், ஜேஇஇ, சியுஇடி போன்ற முக்கியமான தேர்வுகளில் பங்கேற்கும்போது சிக்கல்கள் உருவாகலாம்.
யுஐடிஏஐ தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், பள்ளிகள் மூலமாக கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கான முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “இந்த முகாம்கள் மூலம் நிலுவையில் உள்ள கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புகளை விரைவாக முடிக்கலாம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடைசி நேரத்தில் பதற்றப்படுவதைத் தடுக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுஐடிஏஐ – கூட்டுறவு வங்கிகளுக்கான சமீபத்திய ஆதார் அங்கீகார கட்டமைப்பைப் போலவே, இந்த முயற்சியும் ஆதாரின் தடையற்ற சேவையை வழங்கும் திறனை வலுப்படுத்தும். மேலும், நிதி மற்றும் சமூக உள்ளடக்கத்தை உறுதிசெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் முக்கியம்?
- வங்கிக் கணக்கு தொடங்குதல், பாஸ்போர்ட் பெறுதல், மொபைல் சிம் வாங்குதல் போன்ற தினசரி சேவைகளில் ஆதார் கட்டாயமாகத் தேவைப்படுகிறது.
- அரசாங்கத்தின் பல்வேறு நலத் திட்டங்கள், உதவித் தொகைகள், உதாரணமாக எரிவாயு சலுகை, பி.எம்.கிசான் (PM-Kisan) தொகை, ஓய்வூதியம் ஆகியவை நேரடியாகப் பயனாளியின் வங்கிக் கணக்கில் செல்ல ஆதார் அடிப்படைச் சான்றாகப் பயன்படுகிறது.
- ஒரே நபர் பல பெயர்களில் சலுகைகள் பெறுவதைத் தடுக்கும் வகையில், வெளிப்படைத் தன்மையையும் நியாயத்தையும் உறுதி செய்கிறது.
“ஒரே நபருக்கான ஒரே அடையாளம்” என்ற அடிப்படையில் செயல்படுகிறது. எனவே கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிப் பரிவர்த்தனை, அரசுத் திட்டங்கள் என எந்தத் துறையிலும் தடையின்றிச் சேவைகள் கிடைக்க, ஆதார் புதுப்பிக்கப்பட்டும், துல்லியமாகவும் இருக்க வேண்டும்.
August 29, 2025 2:21 PM IST

