Last Updated:
“அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு வைத்துள்ளது” இந்தியா–ஜப்பான் வர்த்தக மாநாட்டில் நரேந்திர மோடி பேச்சு.
“அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு வைத்துள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா – ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பேசியுள்ளார்.
15 ஆவது இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு சென்றடைந்தார். டோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, இம்பீரியல் உணவகத்திற்கு சென்ற பிரதமர் மோடியை ஜப்பானியர்கள் காயத்ரி மந்திரம் ஓதி வரவேற்றனர்.
ராஜஸ்தானி உடையில் தோன்றிய ஜப்பானியர்கள் சிலர், பஜனை பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர், இந்தியாவின் பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், மோகினியாட்டம், கதக், ஒடிசி உள்ளிட்டவை மூலம் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து டோக்கியோவில் இன்று ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். இதில், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து பேசப்பட்டது.
தொடர்ந்து டோக்கியோவில் நடந்த இந்தியா – ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு வைத்துள்ளது. இந்தியா – ஜப்பானின் சிறு, நடுத்தர நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
உலக அமைதி பாதுகாப்புக்கு இந்தியா – ஜப்பான் இணைந்து செயல்படும். ஜப்பானுடனான பொருளாதார உறவு வலுவாக இருக்கிறது. உயர் தொழில்நுட்பத் துறையில் ஜப்பான் – இந்தியா ஒத்துழைப்பிற்கு முன்னுரிமை. டிஜிட்டல் கூட்டாண்மை 2.0, ஏ.ஐ ஒத்துழைப்பு முயற்சி ஆகியவை லட்சியப் பயணமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
August 29, 2025 5:47 PM IST
“அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு” – பிரதமர் நரேந்திர மோடி


