இந்தியாவில் ஆபத்தில்லாத சேமிப்பை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக தபால் அலுவலகம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தபால் அலுவலகத்தில் ஆர்டி (RD), டிடி (TD), பிபிஎஃப் (PPF), கிசான் விகாஸ் பத்ரா போன்ற பல திட்டங்களுடன், மாதாந்திர வருமானத் திட்டமும் (MIS) ஒரு உறுதியான மற்றும் குறைந்த ஆபத்து கொண்ட முதலீட்டு வாய்ப்பாக இருந்து வருகிறது. இந்தத் திட்டத்தில், ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வட்டியைப் பெறலாம்.
மாதம் ரூ.9,250 வட்டியைப் பெறுவது எப்படி?
- நீங்கள் உங்கள் துணையுடன் (அல்லது குடும்ப உறுப்பினருடன்) சேர்ந்து ஒரு கூட்டு கணக்கை திறக்கலாம்.
- அதில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால்,
- தற்போது நடைமுறையில் உள்ள 7.4% ஆண்டு வட்டி விகிதத்தின் அடிப்படையில்,
- ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வரையிலான வட்டி, வருமானமாக நேரடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதற்காக எந்தவிதமான கூடுதல் முயற்சியும் செய்யத் தேவையில்லை. முதலீடு செய்தால் மட்டும் போதும், மாதந்தோறும் வட்டித் தொகை தானாகவே உங்களது வங்கிக் கணக்குக்கு வந்து சேரும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
முதலீட்டு வரம்பு
- தனி கணக்கு: அதிகபட்சம் ரூ.9 லட்சம்
- கூட்டுக் கணக்கு: அதிகபட்சம் ரூ.15 லட்சம்
குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000 (அல்லது 1,000இன் மடங்குகளில்)
முதிர்வு காலம்: 5 ஆண்டுகள், முதிர்வுக்கு பிறகு, முதலில் முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெறலாம்.
வட்டி: மாதந்தோறும் வரவு வைக்கப்படும். (கணக்கு வைத்திருப்பவர் மாதாந்திர வட்டியை எடுக்காமல் விட்டாலும், அந்த தொகை அப்படியே இருக்கும், அதற்காக கூடுதல் வட்டியெல்லாம் கிடைக்காது)
முன்கூட்டியே மூடல்: ஓராண்டு முடிந்தபிறகு, தேவையெனில் கணக்கை மூடலாம்.
வட்டி பெறும் வசதிகள்
- தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் மூலம் நேரடியாகப் பெறலாம்
- இசிஎஸ் (ECS) மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் வட்டியை வரவு வைக்க செய்யலாம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ரூ.15 லட்சத்தை ஒருமுறை முதலீடு செய்தால், அடுத்த 5 ஆண்டுகள் வரை மாதந்தோறும் ரூ.9,250 நிச்சயமான வருமானம் கிடைக்கும் என்பதால் இது ஒரு பாதுகாப்பான சேமிப்பு வழியாகும்.
சேமிப்பு மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் நிச்சயமான வருமானம் தரும் தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டம் இது என்பதால், நீண்ட கால நிதி நிலைத்தன்மைக்கு உதவக்கூடிய ஒரு பயனுள்ள வழியாகும். குறைந்த ஆபத்து, அரசு உத்தரவாதம், எளிய விதிமுறைகள் என இவை அனைத்தும் சேர்ந்து, இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு மிகவும் நம்பகமான முதலீட்டு வாய்ப்பாக மாற்றுகின்றன.
August 28, 2025 10:14 PM IST

