புத்ராஜெயா:
சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மேற்கொண்ட சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையில் பரிசோதிக்கப்பட்ட 500 வணிக வாகன நிறுவனங்களில் 60% க்கும் அதிகமானவை தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன.
இதற்கு GPS சாதனங்களை முறையற்ற முறையில் நிறுவியதே முக்கிய காரணமாகும் என்று JPJ இயக்குநர் ஜெனரல் டத்தோ ஏடி ஃபேட்லி ராம்லி கூறினார்.
ஜூன் 23 முதல் ஜூலை 31 வரை நடைபெற்ற இந்த நடவடிக்க, நாடு முழுவதும் உள்ள சுமார் 3 லட்சம் வணிக வாகன இயக்குநர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இந்த “முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன,” என்று அவர் JPJ கவுண்டர்களில் இ-வாலட் மூலம் பணமில்லா பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்திய பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு தரநிலைகள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய JPJ தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், தணிக்கை செயல்முறையை டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட திறமையான முறைகள் மூலம் எளிதாக்க போக்குவரத்து அமைச்சகத்துடன் ஒத்துழைப்பதாகவும் கூறினார்.
தணிக்கையில் தோல்வியடைந்த நிறுவனங்களுக்கு, தங்களது குறைபாடுகளை சரிசெய்ய ஒரு மாத அவகாசம் வழங்கப்படும். அதனை பின்பற்றத் தவறினால், அனுமதி ரத்து உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள் நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (APAD) மூலம் அமலாக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதற்கிடையில், மோட்டார் நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்கள் சாலை விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும், அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெறவும் ஏடி ஃபேட்லி தனியே வலியுறுத்தினார்.
“எந்தவொரு மோட்டார் நிகழ்வையும் நடத்துவதற்கு முன், போக்குவரத்து சட்டங்களை முழுமையாகப் பின்பற்றி அதிகாரப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் நினைவூட்டுகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.




