Last Updated:
நீதிபதி பி.வி. நாகரத்னா எதிர்ப்பை மீறி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி விபுல் பஞ்சோலி நியமிக்கப்பட்டார்.
கொலீஜியத்தில் உள்ள நீதிபதியின் எதிர்ப்பை மீறி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் பஞ்சோலி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு சமீபத்தில் பரிந்துரைத்தது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியம் கூடியது. அப்போது, விபுல் பஞ்சோலி பரிந்துரைக்கப்பட்டதற்கு கொலீஜியத்தில் உள்ள ஒரே ஒரு பெண் நீதிபதியான பி.வி.நாகரத்னா எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.
2023 ஜூலை வரை குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பஞ்சோலி பின்னர் பாட்னாவுக்கு மாற்றப்பட்டார். ஏற்கனவே குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 2 பேர் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர்.
இந்நிலையில், அவசர அவசரமாக குஜராத்தில் இருந்து பாட்னாவுக்கு மாற்றப்பட்ட பஞ்சோலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நீதிபதி நாகரத்னா குறிப்பிட்டதாகத் தெரிகிறது. இது கொலீஜியத்தின் மீது தற்போது உள்ள நம்பகத்தன்மையை இழக்க வைக்கும் என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பி.வி. நாகரத்னாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பரிந்துரைக்கப்பட்ட இருவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைத்தொடர்ந்து இரு நீதிபதிகள் நியமனத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.
August 27, 2025 9:52 PM IST


