
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட பின்னர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ருக்ஷான் பெல்லனா மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பதில்அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
ஓர் அரச அதிகாரியாகவும் மருத்துவ நெறிமுறைகளின்படியும், அவர் அவ்வாறு செய்ய முடியாது என்றும், குறிப்பாக ஒரு நோயாளியின் உடல்நிலை குறித்து மற்ற தரப்பினருக்கு தகவல்களை வெளியிடக்கூடாது என்றும் பதில் அமைச்சர் கூறினார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதன்கிழமை (27) நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே பதில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட பிரதி பணிப்பாளருக்கு உரிமை இல்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி அவரது பிரிவில் சிகிச்சை பெறவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
சிகிச்சைக்காக தேசிய மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நோயாளியும் ஒரு நோயாளி என்றும், அந்த நோயாளி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் பதில் பணிப்பாளர் தனக்குப் பொருத்தமற்ற ஒன்றைச் செய்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

