Last Updated:
கச்சத்தீவை இந்தியாவுக்கு விடமாட்டோம் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்தார்.
“கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தவெக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்களைப் பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக, கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்” என பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தினார்.
இந்நிலையில் இன்று இலங்கையில், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றார். அவரிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், “தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம் என்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறி வருகின்றனர். அதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.
அரசு மட்டத்தில் யாராவது கருத்து தெரிவித்திருந்தால், அதன் மீது கவனம் செலுத்தலாம். எனவே இவ்வாறான கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
August 27, 2025 7:01 PM IST
“கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” – விஜய் பேச்சுக்கு இலங்கை அரசு பதில்


