Last Updated:
மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு உடனடியாக அவசர சிகிச்சை வழங்கி பெண்ணை சுயநினைவிற்கு கொண்டு வந்துள்ளனர்.
21 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக லைவ் வீடியோ பதிவு செய்யவே, இன்ஸ்டாகிராம் உரிமையாளரான மெட்டா அளித்த சரியான எச்சரிக்கை மூலமாக உத்தர பிரதேச போலீசார் 19 நிமிடங்களுக்குள் அப்பெண்ணின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னுடைய பாய் ஃபிரண்டுடன் பிரேக்-அப் செய்த காரணத்தால் மன அழுத்தத்திற்கு ஆளானதாலயே இந்த முடிவை எடுத்ததாக அந்த பெண் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று காசிபூரில் நடைபெற்றிருக்கிறது. இரவு 11.34 மணிக்கு அந்த பெண் தண்ணீரில் மருந்துகளை கலந்து அதனை குடித்தவாறு இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். “விஷத்தை சாப்பிடுவதற்கு நான் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறேன்” என்று தன்னுடைய பதிவுக்கு கேப்ஷனை கொடுத்திருக்கிறார். மெட்டாவின் பாதுகாப்பு அமைப்பு இந்த பதிவை உடனடியாக சூஸைட் ரிஸ்க் என்று குறித்து லக்னோவில் அமைந்திருக்கும் உத்தரபிரதேச காவல் நிலைய தலைமையகத்தில் உள்ள சோஷியல் மீடியா சென்டருக்கு இமெயில் மூலமாக எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையின் பெயரில் மூத்த போலீஸ் அதிகாரியான ராஜீவ் கிருஷ்ணா உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார். எச்சரிக்கையில் வழங்கப்பட்டிருந்த மொபைல் நம்பரை பயன்படுத்தி சோஷியல் மீடியா சென்டர் லொகேஷனை கண்டுபிடித்து உடனடியாக காசிபூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். பெண் கான்ஸ்டபிள் உடன் இணைந்து லோக்கல் போலீஸ் 19 நிமிடங்களில் அந்த பெண்ணின் வீட்டை அடைந்திருக்கின்றனர். உட்புறமாக லாக் செய்யப்பட்டிருந்த அந்தப் பெண் இருந்த அறை கதவை உடைத்து படுக்கையில் சுயநினைவை இழந்த அந்த பெண்ணை மீட்டெடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு உடனடியாக அவசர சிகிச்சை வழங்கி பெண்ணை சுயநினைவிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பிய போது, தான் டெல்லியில் உள்ள வாட்டர் சப்ளை துறையில் வேலை செய்வதாகவும், அங்கு தான் சந்தித்த பிரக்யராஜ் என்பவருடன் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்ட பிறகு தனக்கு வேலை பறிபோகவே வீட்டிற்கு திரும்பியதால் தன்னுடைய தொடர்பையும் பிரக்யராஜ் கொஞ்சம் கொஞ்சமாக துண்டித்து, முற்றிலுமாக புறக்கணித்ததாக கூறியுள்ளார். இந்த பிரேக்-அப் காரணமாக கடுமையான மனசோர்வு ஏற்பட்டு, இந்த தற்கொலை முயற்சியை எடுத்ததாக அந்த பெண் குறிப்பிட்டிருக்கிறார். பின்னர் போலீசார் அந்த பெண்ணுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி, இது மாதிரியான செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என்ற உத்தரவாதத்தை அவரிடம் இருந்து பெற்றிருக்கின்றனர். உடனடியாக செயல்பட்டு தன்னுடைய மகளின் உயிரை காப்பாற்றியதற்காக அப்பெண்ணின் குடும்பம் போலீசார் குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு முதலில் இருந்து மெட்டா மற்றும் UP போலீசார் இடையே உண்டாக்கப்பட்ட ஒரு ஏற்பாட்டின் பெயரில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் தற்கொலை சம்பந்தமான பதிவுகள் கண்காணிக்கப்பட்டு, உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த எச்சரிக்கை மூலமாக போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து தங்களால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இப்படி ஜனவரி 1, 2023 முதல் ஆகஸ்ட் 10, 2025 வரை இந்த அமைப்பு மூலமாக உத்தர பிரதேஷ் மாநிலம் முழுவதிலும் 1241 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
August 14, 2025 12:11 PM IST
தற்கொலை முயற்சியை இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீம் செய்த பெண்.. 19 நிமிடங்களுக்குள் உயிரை காப்பாற்றிய போலீஸ்!


