Last Updated:
அமித்ஷா மசோதா தாக்கல் செய்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான கேள்விகள் எழுப்பி, டெல்லி பாஜக ஆட்சியை விமர்சித்து, சிறை அனுபவம் குறித்து கருத்து தெரிவித்தார்.
குற்றச் செயல்களில் கைது செய்யப்படும் முதல்வர், பிரதமர் 30 நாட்கள் சிறையிலிருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என அமித்ஷா நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்த நிலையில், அவருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சராமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஆம் ஆத்ம கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரை தன் கட்சியில் சேர்த்து, அவர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து, அவர்களை முதல்வர், துணை முதல்வர்களாக ஆக்கினால், அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமா? அவர் எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பொய்யான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்த பின் அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டால் அவரை பொய்யான வழக்கில் சிறையில் தள்ளிய அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை?” என அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
அதேபோல அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “கடந்த 7 மாதங்களில் டெல்லியின் பாஜக அரசாங்கம் மக்களை குழப்பத்தில் ஆழ்தியுள்ளது. இதனால் மக்கள் சிறையிலிருந்து ஆட்சி செய்தவர்களை நினைத்துக்கொள்கிறார்கள். சிறையிலிருந்து நான் ஆட்சி செய்யும்போது, டெல்லியில் மின்துண்டிப்பு இல்லை, தண்ணீர் பிரச்சினை இல்லை. இலவசமாக மருந்து கிடைத்தது. மழையால் ஏற்படும் மோசமான நிலையை டெல்லி அடைந்திருக்கவில்லை” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
August 25, 2025 10:03 PM IST
குற்றவாளிகளை தனது கட்சியில் சேர்ப்பவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? – அமித்ஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி


