Last Updated:
சங்காரெட்டி மாவட்டம் முத்தக்யாசாராமில், 10 வயது சஹஸ்ரா கிரிக்கெட் பேட் மற்றும் பணத்திற்காக பள்ளி மாணவனால் 20 முறை கத்தியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி, சிறுவன் ஒருவன் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் முத்தக்யாசாராம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா – ரேணுகா தம்பதியின் மகள் சஹஸ்ரா. 10 வயதே ஆன சஹஸ்ரா வீட்டருகே உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் சஹஸ்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டிற்குள் சஹஸ்ரா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடல் முழுவதும் கத்திக் குத்து காயங்களுடன் சஹஸ்ரா கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தியும், கொலையாளி குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சஹஸ்ராவின் பள்ளியில் 10 வது படிக்கும் ஒரு மாணவன் வந்து செல்வது பதிவாகி இருந்தது.
அந்த மாணவனை பிடித்து விசாரிக்க, அவர்தான் கொலையாளி என்பது தெரியவந்தது. சஹஸ்ராவின் வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட் மற்றும் பணத்தை திருடுவதற்காக அவரை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார் அந்த சிறுவன். சில நாட்களுக்கு முன்பு சஹஸ்ராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க, அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த மாணவன். அப்போது சஹஸ்ராவுக்கு கேக் ஊட்டி விட்ட மாணவன், அவரது வீட்டில் கிரிக்கெட் பேட் மற்றும் பணம் இருப்பதை பார்த்து அதை திருடுவதற்கு திட்டம் போட்டுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று கிரிக்கெட் பேட்டை திருடுவதற்காக அவரது வீட்டிற்கு சென்றபோது, சஹஸ்ரா சத்தம் போட்டதால், அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக மாணவன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சஹஸ்ராவின் உடலில் 20 இடங்களில் கத்திக் குத்து காயம் இருப்பதாக உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, கிரிக்கெட் பேட் மற்றும் பணத்தை எப்படி திருட வேண்டும் என்று அவர் கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
August 24, 2025 7:14 AM IST
10 வயது சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன்.. வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி!


