Last Updated:
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சிஐடி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்குச் செல்ல, அரசு நிதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் நடந்தது என்ன?
லண்டனில் தனது மனைவி பட்டம் பெறும் விழாவிற்கு அரசு நிதியைப் பயன்படுத்திப் பயணித்தாரா? ரணில் விக்ரமசிங்கே. நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த சமயத்தில் அரசு நிதியை அநியாயமாகச் செலவழித்தாரா?. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜரானவரை, அதிரடியாக சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையின் முன்னாள் அதிபருக்கு எதிராக எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையின் பின்னணி என்ன?
இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பொறுப்பில் இருந்த காலம், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாடு ஸ்தம்பித்துப் போனது. பெரும் போராட்டம் வெடித்து நாட்டு மக்கள் கொந்தளிக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். அதனால் 2022 ஜூலை 14ஆம் தேதி முதல் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.
2024 செப்டம்பர் 23ஆம் தேதி வரை பொறுப்பில் இருந்த ரணில், கடந்த ஆண்டு நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைய புதிய அதிபராக அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்றார். அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்கே மீது பல்வேறு சர்ச்சைக் குற்றச்சாட்டுகள் லிஸ்ட் போடப்பட்டன.
குறிப்பாக அரசு நிதியை சட்டவிரோதமாக சொந்த விஷயத்திற்கு செலவழித்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதிபராக பொறுப்பில் இருந்த போது 2023 செப்டம்பரில் கியூபா நாட்டின் ஹவானா நாட்டில் நடந்த ஜி-77 உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேரடியாக லண்டனுக்குப் பயணம் செய்தார். காரணம் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் ரணில் விக்ரமசிங்கேவின் மனைவி மைத்ரிக்கு பட்டம் வழங்கப்பட்டது.
அந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக அவர் அரசு நிதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு முறைப்பயணம் இல்லாமல் சொந்த காரணங்களுக்காக அரசின் பணத்தைச் செலவழித்து விட்டதாக தகவல் கசிய அந்நாட்டினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். நாடு பெரும் பொருளாதார நெருக்கடி சிக்கித் தவிக்கும் சமயத்தில் ரணிலின் இது போன்ற செயல்கள் அதிருப்தி அளித்திருப்பதாக அரசு கட்சியினர் பலரும் கருத்து தெரிவித்தனர்.
அது தொடர்பாக இலங்கையின் பொருளாதார சிஐடி போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். அதில் தன் மீதான குற்றச்சாட்டு விசாரணைக்கு சிஐடி அலுவலகத்தில் ஆஜரான விக்ரமசிங்கே எதிர்பாராத நேரம் அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு பணத்தை சொந்த பயணத்திற்காகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டிருப்பது தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 23, 2025 7:29 AM IST
அரசு நிதியை சொந்த வேலைக்கு செலவழித்தாரா ரணில்? – பகீர் குற்றச்சாட்டு.. சிஐடி அலுவலகத்தில் நடந்தது என்ன?

