மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் 2 மோனோ ரயில்கள் பழுதடைந்த நிலையில், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் 5ஆவது நாளாக நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. மும்பையில், 11 மணிநேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை கொட்டியது. இதனால், மித்தி ஆறு நிரம்பியதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மக்கள் அடர்த்தி மிகுந்த குர்லா, சகினாகா பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மும்பை விமான நிலையம், ரயில்வே தண்டவாளங்கள் அருகே உள்ள பகுதிகளிலும் நீர் சூழ்ந்தது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கிராந்தி நகர் பகுதியிலிருந்து சுமார் 400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
வணிக வளாகம் அருகே நீர் தேங்கிய நிலையில் சிறுவர்கள் நீச்சலடிக்கும் நிலையும் ஏற்பட்டது. சாலைகளில் நீர் தேங்கிய நிலையில், வெள்ளத்திலேயே வாகனங்கள் நீந்திச் செல்லும் நிலை ஏற்பட்டது. மும்பையில் 24 விமானங்கள் ரத்துசெய்யப்பட்ட நிலையில், 11 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
கனமழைக்கு மத்தியில் மும்பையில் மைசூர் காலனி மற்றும் பக்தி பார்க் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்த மோனோரயில் பழுதாகி நின்றது. இதனால், ரயிலில் 582 பயணிகள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்துவந்த மீட்புப் படையினர் சுமார் 3 மணிநேரம் போராடி பயணிகளை மீட்டனர்.
மோனோ ரயிலில் 104 மெட்ரிக் டன் அளவுக்கே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்ற நிலையில், 109 மெட்ரிக் டன் அளவுக்கான பயணிகள் இருந்ததால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
முன்னதாக, ஆச்சார்யா அட்ரே மற்றும் வதாலா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்ற மற்றொரு மோனோ ரயிலும் பழுதானது. அதிலிருந்து சுமார் 200 பயணிகள் மீட்கப்பட்டு, மோனோ ரயிலை வதாலா நிலையத்துக்கு மீட்புப்படையினர் கொண்டுசென்றனர்.
தொடர் மழை காரணமாக, மகாராஷ்டிராவில் கடந்த 5 நாட்களில் 21 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மும்பை, தானே, ராய்காடு, ரத்னகிரி, பால்கர் மாவட்டங்களுக்கு இன்றும் அதி கனமழைக்கான ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது.
August 20, 2025 6:42 AM IST

