Last Updated:
என்டிஏ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெ.பி.நட்டா இதை அறிவித்தார். ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 21-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளரைத் தேர்வுசெய்ய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு கூட்டணி தலைவர்கள் அதிகாரம் வழங்கியுள்ளனர்.
அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்துக்குப் பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ளார்.
தமிழ்நாட்டு பாஜக தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து கட்சியை வளர்த்த அவர், 1998, 1999 என இரண்டு முறை கோவை தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய கயிறு வாரியத் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், கேரள மாநில பாஜக பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அத்துடன் இவர் 2016 முதல் 2019 வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார். கடந்த 2023ம் ஆண்டு இவரை ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
பின்னர் தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய அதன்பின், ஜார்கண்ட், புதுச்சேரி மற்றும் தெலங்கானா என ஒரே நேரத்தில் 3 மாநில ஆளுநர் பணியைக் கவனித்து வந்தார் இவர். இதனைத் தொடர்ந்து தான் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவராகப் போட்டியிட இருக்கிறார். இதனிடையே, இந்தியா கூட்டணி சார்பிலும் வேட்பாளரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டணித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Delhi,Delhi,Delhi
August 17, 2025 8:13 PM IST

