Last Updated:
நாமினி அல்லது சட்டப்பூர்வமான வாரிசுகளிடமிருந்து கிளைம்கள் மற்றும் அது சம்பந்தமான ஆவணங்களை வாங்குவதற்கு வங்கிகள் நிலையான படிவங்களைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் படிவங்கள் அனைத்து வங்கி கிளைகள் மற்றும் அவற்றின் வெப்சைட்டுகளில் கிடைக்கும்.
வங்கிகளின் இறந்துபோன வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இது குறித்து ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது. இறந்த வாடிக்கையாளர்களின் அக்கவுண்டுகள், லாக்கர்கள் சம்பந்தமான கிளைம்களின் செட்டில்மெண்ட் இந்த புதிய RBI விதிகள் மூலமாக விரைவாகவும், எளிமையாகவும் கிடைக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாமினி அல்லது சட்டப்பூர்வமான வாரிசுகளிடமிருந்து கிளைம்கள் மற்றும் அது சம்பந்தமான ஆவணங்களை வாங்குவதற்கு வங்கிகள் நிலையான படிவங்களைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் படிவங்கள் அனைத்து வங்கி கிளைகள் மற்றும் அவற்றின் வெப்சைட்டுகளில் கிடைக்கும். அதோடு கிளைம் செட்டில்மெண்ட் செய்வதற்குத் தேவையான டாக்குமெண்ட்களின் பட்டியல் மற்றும் அதற்கான படிப்படியான செயல்முறையும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இறந்த வாடிக்கையாளர்களின் அக்கவுண்டுகள், லாக்கர்கள் சம்பந்தமான கிளைம்கள்: தேவையான டாக்குமெண்ட்கள்
கோரிக்கையை நிறைவு செய்வதற்கு வங்கிகள் பின்வரும் ஆவணங்களைப் பெற வேண்டும்:
- நாமினி / வாரிசுதாரர்களால் முறையாகக் கையெழுத்திடப்பட்ட பின்னர் இணைப்பு 1-Aல் குறிப்பிடப்பட்டுள்ள கிளைம் படிவம்.
- இறப்புச் சான்றிதழ்
- வாரிசுதாரர்கள் / நாமினிகளின் அடையாளம் மற்றும் முகவரியை நிரூபிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணம்
வாரிசுதாரர்கள் / நாமினிகளுக்கு இறந்த வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட் மற்றும் லாக்கர்களுக்கான அனுமதி வழங்குவதற்கு முன்பு வங்கிகள் பின்வரும் விஷயங்களை உறுதிப்படுத்த வேண்டும்
- இறந்த வாடிக்கையாளரின் வாரிசுதாரர்கள் / நாமினிகளின் அடையாளத்தை நிரூபிக்கும் சரியான ஆவணங்களைப் பெறுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- இறந்த வாடிக்கையாளரின் லாக்கரில் உள்ள உடைமைகளை நாமினிகள் / வாரிசுதாரர்கள் அணுகுவதற்கோ அல்லது அதில் உள்ள பொருட்களை எடுப்பதற்கோ நீதிமன்றங்கள் இதுவரை எந்த ஒரு தடையையும் விதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- நாமினிகள் / வாரிசுதாரர்களுக்கு லாக்கரை அணுகவும். அதில் உள்ள பொருட்களை எடுக்கவும் வழங்கப்படும் உரிமையானது இறந்த வாடிக்கையாளரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் பொறுப்பாளராக (Trustee) மட்டுமே கொடுக்கப்படுகிறது.
- லாக்கரில் உள்ள பொருட்கள் தொடர்பாக வேறு எவரேனும் நாமினிகள்/வாரிசுதாரர்களுக்கு எதிராக கிளைம் செய்யும்பட்சத்தில், வங்கி வழங்கிய அனுமதி அவர்களின் உரிமைகோரலை ஒருபோதும் பாதிக்காது.
- இறந்த வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குகள் மற்றும் லாக்கர்களில் உள்ள பொருட்களை கிளைம் செய்வதற்கான உச்சவரம்புத் தொகையை வங்கிகள் நிர்ணயிக்க வேண்டும். அதன்படி, குறைந்தபட்சம் ₹15 லட்சம் வரை கோரப்படும் தொகைக்கு, மற்ற சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து ஆட்சேபணையில்லா சான்றிதழ் மற்றும் இழப்பீட்டு பத்திரம் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
- அதே சமயம், அதற்கு மேற்பட்ட தொகைக்கு, வாரிசுரிமை சான்றிதழ் அல்லது சட்ட வாரிசு சான்றிதழ் போன்ற கூடுதல் சட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.
இறந்த வாடிக்கையாளர் லாக்கருக்கு வாரிசு நியமனம் செய்யாத பட்சத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் லாக்கரை அணுகுவது தொடர்பாக எந்தவொரு தெளிவான தகவலையும் வழங்காத நிலையில், சட்ட வாரிசுகளிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, கீழ்க்காணும் ஆவணங்களைச் சமர்ப்பித்து, வாரிசுரிமை சான்றிதழ் போன்ற சட்ட ஆவணங்கள் இல்லாமல், வங்கி லாக்கர் தொடர்பான கிளைம்களைத் தீர்க்கலாம்.
- கிளைம் சமர்ப்பித்துள்ள சட்டப்பூர்வ வாரிசுதாரர்களால் முறையாகக் கையெழுத்திடப்பட்ட பின்னர் இணைப்பு 1-Bல் குறிப்பிடப்பட்டுள்ள கிளைம் படிவம்.
- இறப்புச் சான்றிதழ்
- கிளைம் செய்தவர்களின் அடையாளம் மற்றும் முகவரியை நிரூபிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணம்.
- சம்பந்தப்பட்ட சட்ட வாரிசுகளிடமிருந்து (அதாவது, உரிமை கோராத வாரிசுகளிடமிருந்து) பின் இணைப்பு I-D-இல் உள்ளபடி, உரிமை கோரல் மறுப்பு/ஆட்சேபணையில்லா கடிதம்
- இறந்த வாடிக்கையாளரின் சட்ட வாரிசுகள் குறித்த சான்றிதழ். இது, பின்இணைப்பு I-E-இல் உள்ளபடி, ஒரு நீதிபதி முன்னிலையில், அக்குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உடைய ஆனால், சம்பந்தமில்லாத மற்றும் வங்கிக்கு ஏற்புடைய ஒருவரால், பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
August 12, 2025 4:59 PM IST
இறந்தவர்களின் லாக்கர் அனுமதியை பெற வாரிசுதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்… RBIன் புதிய விதிகள் என்னென்ன…?


