அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் சீனப் பொருள்களுக்கு 145 சதவிகித வரி; சீனாவில் இறக்குமதி ஆகும் அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவிகித வரி.
இப்படி இரு நாடுகளும் மாறி மாறி ராக்கெட் வேகத்தில் பரஸ்பர வரிகளை விதித்துகொண்டனர். ஆனால், இது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கதை.
அதன் பிறகு, சமாதானம் ஏற்பட்டு, தற்போது அமெரிக்க பொருள்கள் மீது சீனாவில் 10 சதவிகித வரியும், சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவில் 10 சதவிகித வரியும் அமலில் உள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட 145 சதவிகித வரி அமலுக்கு வருவதற்கான இரண்டாவது காலக்கெடுவை தற்போது அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
முன்னர் கொடுக்கப்பட்ட காலக்கெடுவின் படி, இன்று முதல் அந்த வரி அமலுக்கு வர இருந்தது. ஆனால், இந்தக் காலக்கெடுவைத் நவம்பர் 10-ம் தேதி வரை, 90 நாள் வரி நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ட்ரம்ப், “சீனாவிற்கான 90 நாள் வரி நிறுத்தத்திற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பிரேசிலை விட, ரஷ்யாவில் இருந்து அதிக எண்ணெயை இறக்குமதி செய்வது சீனா தான். ஆனால், இதுவரை, அதற்கான வரியை சீனா மீது அமெரிக்கா விதிக்கவில்லை.
இது குறித்து அமெரிக்கா யோசித்து வருவதாக அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி வான்ஸ் தெரிவித்திருந்தார்.
ஆனால், இப்போது ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள உத்தரவில், இந்த அபராதம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.

