Last Updated:
சாலை இணைப்பு இல்லாததால், அடிப்படை தேவைகளுக்கு செல்வதற்கு கூட, வயல்வெளிகள் வழியாக செல்லும் நடைபாதைகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்தியாவில் இன்னும் பல கிராமங்களில் சரியான சாலை வசதிகள் இல்லாததால் மக்கள் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். அதிலும் அவசர காலங்களில் இந்த நிலைமை இன்னும் மோசமாகிறது. தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் சமீபத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாகலிகிட்டா மண்டலத்தின் சாந்திநகர் தாண்டா பஞ்சாயத்தில் உள்ள முனியா நாயக் தாண்டாவைச் சேர்ந்த பழங்குடியினர் சாலைகள் இல்லாததால் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சாலை இணைப்பு இல்லாததால், இவர்கள் அடிப்படை தேவைகளுக்கு செல்வதற்கு கூட, வயல்வெளிகள் வழியாக செல்லும் நடைபாதைகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மதியம், முனியா தண்டாவைச் சேர்ந்த கௌஷிபாய் என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக 108 என்ற எண்ணுக்கு ஆம்புலன்ஸை அழைத்தனர். இருப்பினும், தண்டாவில் சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்ஸ் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சிக்கிக் கொண்டது. இந்த நிலையில், மழை காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், நடந்து செல்வதும் கடினமாகிவிட்டது. இதனையடுத்து ஆஷா பணியாளர்களின் உதவியுடன், குடும்ப உறுப்பினர்கள் கர்ப்பிணிப் பெண்ணை முதுகில் சுமந்து கொண்டு 3 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்கு அழைத்துச் சென்றனர். இந்த பயணம் மெதுவாகவும் கடினமாகவும் இருந்தது.
ஆம்புலன்ஸை அடைவதற்குள், கௌஷி பாய் வரும் வழியிலேயே ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த பிரசவத்திற்கு ஆஷா பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பெண்கள் உதவினார்கள். பிரசவம் முடிந்ததும், தாயும், புதிதாகப் பிறந்த குழந்தையும் பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றி, மேல் சிகிச்சைக்காக நாராயண்கேட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை தாண்டா மக்களின் கஷ்டங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சாலை வசதிகள் இல்லாததால் தாங்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
August 12, 2025 8:33 AM IST
ஆம்புலன்ஸ் வர முடியாததால் கர்ப்பிணி பெண்ணை 3 கிமீ சுமந்து சென்ற குடும்பத்தினர்.. வழியிலேயே குழந்தை பிறந்தது..!


