Last Updated:
கடந்த மாதம் 27 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற ஃபிட்னஸ் தேர்வில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ச்சி பெற்றார்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் உடல் தகுதியை நிரூபிக்க இந்திய அணி வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் உத்தேச இந்திய அணி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்துவிட்டு இந்தியா திரும்பி உள்ளது. இங்கிலாந்து தொடர் குறித்து இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அசைன்மென்டான ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் 8 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை. இதனையொட்டி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்களுக்கான பிட்னஸ் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில் ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 27 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற ஃபிட்னஸ் தேர்வில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ச்சி பெற்றார். அவர் ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு இன்று உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. நாளையும் அவருக்கு முக்கிய சோதனைகள் உள்ளன. இதே போன்று இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் சமீபத்தில் ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அதிலிருந்து அவர் மீண்டு வரும் நிலையில் சூரியகுமார் முழுமையாக திரும்புவதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியில் பின்வரும் வீரர்கள் இடம் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, க்ருணால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா.
August 11, 2025 9:25 PM IST


