இப்போது, ட்ரம்ப் மேற்கொண்டிருக்கும் புதிய வரிகள் இந்தியாவை நேரடியாகக் குறிவைத்துள்ளன. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி அமலாகியுள்ளது. இனிமேல் நமது ஏற்றுமதிகள் 33.26% வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.
செப்டம்பர் மாதம் முதல் கூடுதல் வரியாக மேலும் 25% அமலாகும் என்றும், இனிமேல் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் அடுத்தடுத்து மிரட்டல்களை விடுத்து வருகிறார் அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப். இந்த வரியிலிருந்து கச்சா எண்ணெய், சுத்திகரித்த எரிபொருட்கள், ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்கள், பிற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு மட்டுமே விலக்கு உள்ளது.

ஜவுளி, ஆடைகள், நகைகள், ரத்தினங்கள், மருந்துப் பொருட்கள், கடல் உணவு, இயந்திரப் பாகங்கள், சில எலக்ட்ரானிக் உபகரணங்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும். இந்தியாவின் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 18% ஆகும். இதில் சரிபாதியளவு ஏற்றுமதிகளை இந்தப் புதிய வரிகள் பாதிக்கக்கூடும் என்று சில கணக்கீடுகள் கூறுகின்றன.
இருப்பினும், பி.எச்.டி.சி.சி.ஐ மதிப்பீட்டின்படி, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இதனால் பாதிக்கப்படும் என்றும், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த வரிகளால் ஏற்படும் பாதிப்பு 0.19 சதவீதம்கூட இருக்காது என்றும் கூறப்படுகிறது.

