Last Updated:
இந்த நிறுவனம் நாடு முழுவதும் 45-க்கும் அதிகமான உற்பத்தி மையங்கள் மூலம் பாட்டில் தண்ணீரை வழங்கி வருகிறது.
வெளிநாட்டில் படித்து, தாய் நாட்டிற்குத் திரும்பி தனது முயற்சி தோல்வியடைந்த பின்னரும், ரூ.449 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கி தற்போது ஓர் சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறார் கிளியர் பிரீமியம் வாட்டர் நிறுவனத்தின் சிஇஓ நயன் ஷா, அவரைப் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
இந்தியர்கள் பலர் வெளிநாட்டில் மேல் படிப்புக்காகச் செல்வது மட்டுமல்லாமல், அங்கு வாழ்வதையே வாழ்வின் இறுதிக்கட்ட குறிக்கோளாகக் கருதுகின்றனர். ஆனால், சிலர் மட்டுமே தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பி, அங்கு சாதனை படைத்து, சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெருமை சேர்க்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் தான் நயன் ஷா. இவர், தற்போது கிளியர் பிரீமியம் வாட்டர் (Clear Premium Water) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருந்து வருகிறார். கடந்த இருபது ஆண்டுகளாக இவர் வழிநடத்தும் இந்த நிறுவனம், இந்திய பாட்டில் குடிநீர் சந்தையில் முக்கியப் பங்காற்றுகிறது. அவரது பங்கு மற்றும் வெற்றியின் மூலம், நயன் ஷாவின் நிகர மதிப்பு தற்போது ரூ.351 கோடி ஆக உயர்ந்துள்ளது. அவரது நிறுவனத்தின் மதிப்பீடு மட்டுமே ரூ.449 கோடி ஆகும்.
நயன் ஷா, 1980-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி, குஜராத்தின் அகமதாபாத்தில் பிறந்தார். அவரது குடும்பம் மின்சாரம் மற்றும் கேபிள் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், நயன் ஷா தானாகவே ஒரு புதிய பாதையில் செல்ல விரும்பினார். அகமதாபாத்தின் குஜராத் லா சொசைட்டியில் (Gujarat Law Society – GLS) வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் முடித்த பின், அவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தனது மேல் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு பல்வேறு அனுபவங்களையும் திறன்களையும் பெற்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் மேலாளராக தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், சுயமாக ஒரு இடத்தை உருவாக்கும் இலக்குடன் 2002-இல் இந்தியாவுக்குத் திரும்பினார்.
ஆரம்பத்தில், நயன் ஷா ‘கார்ன்ட் (Karnt)’ என்ற பெயரில் ஒரு எனர்ஜி பானத்தை அறிமுகப்படுத்தினார். ரெட் புல் (Red Bull) பானத்தின் வெற்றியால் தூண்டப்பட்ட அவர், தனது முன்னாள் மேலாளருடன் சேர்ந்து ரூ.2 கோடி முதலீடு செய்து இந்த முயற்சியைத் தொடங்கினார். 1600-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடக்கமிருந்தாலும், இது வர்த்தக ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை.
இந்த அனுபவம் நல்ல தரமுடைய, பாதுகாப்பான குடிநீர் தான் உண்மையில் தேவை என அவர் உணர வழி செய்தது. இதன் அடிப்படையில் 2005-இல், “கிளியர் பிரீமியம் வாட்டர்” நிறுவனம் உருவாக்கப்பட்டது. இன்று, இந்த நிறுவனம் நாடு முழுவதும் 45-க்கும் அதிகமான உற்பத்தி மையங்கள் மூலம் பாட்டில் தண்ணீரை வழங்கி வருகிறது. மேலும், 1.25 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களில் அவர்களின் தயாரிப்புகள் கிடைக்கின்றன.
நயன் ஷா போன்றவர்கள், தோல்வியை ஓர் அனுபவமாக எடுத்துக் கொண்டு, அதிலிருந்து வெற்றிக்கான வழியை அமைக்கக் கூடியவர்கள். இவ்வாறு, இந்தியாவில் இருக்கக்கூடிய வாய்ப்புகளையும், சமூகத்திற்குள் வேரூன்றிய கனவுகளையும் பயன்படுத்திக் கொண்டு, ஒரு தனித்துவமான நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். வெளிநாட்டில் படித்த பிறகும், தாய்நாட்டிற்குத் திரும்பி சாதனை படைக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக நயன் ஷா தற்போது சிறந்து விளங்குகிறார்.
August 10, 2025 8:28 AM IST
வெளிநாட்டில் கல்வி.. ஆரம்பமே தோல்வி.. தற்போது ரூ.449 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சிஇஓ.. யார் இந்த நயன் ஷா?


