மருத்துவ சுற்றுலா என்பது சிகிச்சை பெற ஒருவர் வேறொரு நாட்டிற்குச் செல்வதைக் குறிக்கும். பெரும்பாலும் குறைந்த செலவு, விரைவான சேவை அல்லது உயர்தர சிகிச்சை கிடைப்பதால் பலரும் சொந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு சிகிச்சைக்காகச் செல்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்காளதேசம் இந்தியாவின் மருத்துவ சுற்றுலாப் பயணிகளின் முன்னணி ஆதாரமாக இருந்து வருகிறது. அதாவது, 2024ஆம் ஆண்டில் மட்டும் 4,82,336 வருகைகளைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து ஈராக் (32,008), சோமாலியா (11,717), ஓமன் (10,431), மற்றும் உஸ்பெகிஸ்தான் (8,921) ஆகியவை இடம்பெற்றுள்ளன. குடியேற்றப் பணியகத் தரவுகளின் படி, 2024-ல் மருத்துவ நோக்கங்களுக்கான மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6,44,387ஆக இருந்தது. ஆனால், 2020இல் இது 1,82,945 எனப் பதிவாகி இருந்தது.
சர்வதேச நோயாளிகளின் இந்திய அணுகலை எளிதாக்க, 171 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இ-மெடிக்கல் விசா மற்றும் இ-மெடிக்கல் அட்டண்டன்ட் விசா போன்ற வசதிகளை அரசு நீட்டித்துள்ளது. மேலும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் “ஹீல் இன் இந்தியா” பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் கீழ் மருத்துவமனைகள், வசதியாளர்கள், ஹோட்டல்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொது-தனியார் கூட்டாண்மைகள் வளர்க்கப்படுகின்றன.
2025-26 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், சுற்றுலாவை வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சியின் முக்கிய துறையாக மாற்றுவது குறித்து வலியுறுத்தினார். இதற்காக, இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள், விருந்தோம்பல் மேலாண்மை, தங்குமிடங்களுக்கு முத்ரா கடன்கள், சுற்றுலா தலங்களுக்கான பயண மற்றும் இணைப்பை மேம்படுத்துதல், சீரமைக்கப்பட்ட இ-விசா வசதிகள் மற்றும் மாநிலங்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகைகள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
August 09, 2025 9:58 PM IST
2025-ன் முதல் 4 மாதங்களில் 1.3 லட்சத்திற்கும் மேற்பட்ட மெடிக்கல் டூரிஸ்ட்கள் இந்தியா வருகை… சுற்றுலா அமைச்சகம் தகவல்

