Last Updated:
டெல்லியில் சிறப்பாகச் செயல்படும் ஐம்பது தூய்மைப் பணியாளர்களை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கௌரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுமார் 50 தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களுடன், இந்த ஆண்டு செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு மண்டல அலுவலகமும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த ஐந்து தூய்மைப் பணியாளர்களின் பெயர்கள் (3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள்) மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களின் பெயர்களுடன் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள தேர்வு செய்யப்படும் தொழிலாளர்களை தங்கள் மண்டலங்களில் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பேணுவதில் அவர்களின் செயல்திறன் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் இறுதிப் பட்டியலை சேகரித்து தொகுப்பதற்கான பொறுப்பு டெல்லி சுற்றுச்சூழல் மேலாண்மை சேவைகளுக்கு (DEMS) வழங்கப்பட்டுள்ளது.
“மாநகராட்சி மன்றத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மை சேவைகள் துறை (DEMS), ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஐந்து துப்புரவுத் தொழிலாளர்கள், மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணைவர்களின் பெயர்களைக் கேட்டுள்ளது” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல சுகாதார ஆய்வாளர் பதவிக்கு குறையாத ஒரு துப்புரவுப் பிரிவு அதிகாரியை குழுவுடன் சேர்த்து பரிந்துரைக்கவும் மாநகராட்சி மண்டலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் பங்கேற்க தூய்மைப் பணியாளர்களுக்கு விடுக்கப்படும் அழைப்பானது அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை கௌரவிக்கும் ஒரு வழி” என்று MCD மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டில் தூய்மையைப் பராமரிப்பதில் இவர்கள் வகிக்கும் பங்கிற்காக இந்தத் தொழிலாளர்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள், இவர்கள் செய்யும் வேலை சமூகத்திற்கு வழங்கப்படும் மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்றாகும்.
ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் டெல்லி சட்டமன்றம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய செயலக வளாகத்திற்குள் அமைந்துள்ள டெல்லியின் சட்டமன்றக் கட்டடம், அரிய மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை மக்களுக்கு அளிக்கும். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தொடர்ச்சியான கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தேசபக்தி உணர்வை அதிகரிக்கும் வகையில், டெல்லி காவல்துறை இசைக்குழுவும் இந்த இடத்தில் நிகழ்ச்சி நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
August 09, 2025 7:11 PM IST
செங்கோட்டை சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் தூய்மை பணியாளர்கள்…! மத்திய அரசு அதிரடி…


