Last Updated:
ராஜஸ்தானில் ஜுன்ஜுனு மாவட்டத்தில் துப்பாக்கியுடன் வந்த நபர்கள் 25க்கும் மேற்பட்ட நாய்களை சுட்டுக் கொன்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தானில் இருசக்கரவாகனத்தில் துப்பாக்கியுடன் வலம் வந்த இருவர் கண்ணில்பட்ட தெரு நாய்களை எல்லாம் சுட்டுத்தள்ளிய பகீர் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம், நவல்கர் பகுதியில் குமாவாஸ் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இருசக்கரவாகனத்தில் துப்பாக்கியுடன் வந்த நபர்கள், கண்ணில் பட்ட நாய்களை எல்லாம் சுட்டுத் தள்ளிய பகீர் காட்சிகள் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட நாய்களை இவர்கள் துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றுள்ளனர்.
கிராமத்தின் தெருக்கள் மற்றும் வயல் வெளிகளில் நாய்களின் உடல்கள் ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த காட்சிகள் விலங்கு நல ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் இருசக்கரவாகனத்தில் செல்லும் இருவர் நாய்களை துரத்தி துரத்தி வேட்டையாடுவதும், அதை பின்னால் பைக்கில் வந்த மற்றொரு நபர் செல்போனில் வீடியோ எடுப்பதும் தெரியந்துள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள நிலையில், குற்றவாளிகளை பிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்டது தும்ரா பகுதியைச் சேர்ந்த ஷியோசந்த் பவேரியா எனத் தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இவர் கிராமத்தில் எவ்விதத் தடையுமின்றி சுதந்திரமாக துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்து தரு நாய்களை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த கொடூரச் செயலை அப்பகுதியைச் சேர்ந்த யாரும் தடுக்க முன்வரவில்லை. பவேரியா தலைமறைவாக இருந்தாலும், அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
இதனிடையே, நாய்கள் கொல்லப்படுவதை ஆதரித்து கிராம மக்கள் குரல் கொடுத்துள்ளனர். நாய்கள் தினமும் தங்கள் ஆடுகளை வேட்டையாடி வந்ததாகவும், இதன் காரணமாக கிராம மக்கள் ஒன்று கூடி அவற்றைக் கொன்றதாகவும் கூறி வருகின்றனர். மேலும், கிராம மக்கள் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, கோபமடைந்த கிராம மக்கள், தெருநாய்கள் இதுவரை 52க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கொன்றுள்ளதாகவும், இதனால் கால்நடை வளர்ப்பு மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தும் கிராம மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். கிராம மக்களின் போராட்டத்தில் இறங்கியதால் உயர்அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் FIR போடுவது என்றால் எங்கள் அனைவர் மீதும் பதிவு செய்யுமாறு கிராம மக்கள் கொந்தளிப்புடன் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
August 08, 2025 7:26 PM IST


