Last Updated:
மலேசியாவில் நடந்த 10-ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிளசிங் சஜீ தங்கம் வென்றார்.
மலேசியாவில் நடைபெற்ற 10-ஆவது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், சரல்விளை பகுதியைச் சேர்ந்த பிளசிங் சஜீ என்ற இளைஞருக்குப் பிறவியிலிருந்தே இரண்டு கைகள் இல்லை. இருப்பினும், சிறுவயது முதலே விளையாட்டு மீது அதீத ஆர்வம் கொண்ட சஜீ, இரண்டு கைகள் இன்றி தனது கால்கள் மூலமே பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, டேக்வாண்டோ எனப்படும் தற்காப்புக் கலையில் கைதேர்ந்த சஜீ, அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 10-ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று தனது அசாத்திய திறமையால் தங்கம் வென்று அசத்தினார்.
விளையாட்டு மட்டுமின்றி, கல்வியிலும் ஆர்வம் கொண்ட சஜீ, பட்டப்படிப்பையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். யூடியூப்பிலும் வீடியோ வெளியிட்டு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் சஜீ வைத்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்பதற்கும் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே அவரின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
August 08, 2025 6:25 PM IST


