உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வாடிக்கை. இந்தப் பகுதியின் அருகே தராலி எனும் கிராமம் அமைந்துள்ளது.
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் உள்ளூர்வாசிகள் வசித்துவருகின்றனர். மேலும், சுற்றுலாப்பயணிகளுக்காக பல ஓட்டல்களும் அமைந்துள்ளன.
இந்நிலையில், கீர் கங்கா பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு மிக கன மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தராலி கிராமத்தில் இருந்த பல வீடுகளும், ஓட்டல்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எதிர்பாராத இந்தச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பெரும் மழை வெள்ளத்தில் சேறும் கலந்து வந்ததால், மலை அடிவாரத்தில் இருக்கும் தராலி கிராமம் முழுவதுமாகவே மண்ணில் புதையுண்டதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது அந்தப் பகுதியில், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. ஆனால், தொடர்ந்து மழை பெய்துவருவதாலும், கீர்கங்கா நதி நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அங்கு மேலும் அச்சம் நிலவிவருகிறது.
இந்நிலையில், தராலி அருகே இருக்கும் சுகி டாப் எனும் இடத்தில் திடீரென தற்போது ஒரு மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக உத்தரகாசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல், வெள்ளத்தில் சிக்கிய நபர் பிழைத்து வரும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்திற்கு வரும் 10ஆம் தேதி வரை கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும், மலை பகுதிகளில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Uttarkashi,Uttarakhand (Uttaranchal)
August 05, 2025 5:54 PM IST

