Last Updated:
முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) இன்று காலமானார். காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து, பாஜகவில் தேசிய துணைத் தலைவராகவும், ஜம்மு-காஷ்மீர், கோவா, மேகாலயா ஆளுநராகவும் பணியாற்றியவர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) இன்று காலமானார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பாக்பத் பகுதியில் பிறந்த சத்யபால் மாலிக், 1960ஆம் ஆண்டுகளில் அரசியலுக்குள் நுழைந்தார். 1980ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸில் இணைந்த அவர், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.
தொடர்ந்து காங்கிரஸில் பணியாற்றிய அவர், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போஃபர்ஸ் ஊழலில் சிக்கியதால் 1987ஆம் ஆண்டு கட்சியை விட்டு விலக்கப்பட்டார்.
இதன்பிறகு 2004ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவருக்கு 2012ஆம் ஆண்டு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
சத்யபால் மாலிக், கடந்த 2017ஆம் ஆண்டு பிகார் மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்தை நீக்கியபோது, அங்கு ஆளுநராக பணியாற்றியவர் சத்யபால் மாலிக்.
இதனையடுத்து 2019ஆம் ஆண்டு கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், வெறும் ஒன்பது மாதங்களில் அங்கிருந்து மாற்றப்பட்டு, மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இறுதியாக மேகாலயா ஆளுநராக இருந்து 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
சிறுநீரகப் பிரச்சனைக்காக டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்களின் தொடர் சிகிச்சை இருந்து வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் காலமானார்.
August 05, 2025 2:12 PM IST


