Last Updated:
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் கனமழையால் கங்கை நதியில் வெள்ளம் ஏற்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் நிஷாத், வீட்டை சூழ்ந்த வெள்ளத்திற்கு பூஜை செய்து, புனித நீராடிய வீடியோ வைரலாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்துவருகிறது. இதனால், அம்மாநிலத்தில் இருக்கும் முக்கிய நதியான கங்கை நதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால், பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளையும், உதவிகளையும் மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தன் வீட்டின் வெளியே இருக்கும் கங்கை வெள்ளத்திற்கு பூஜை செய்வதும், வீட்டிற்குள் புகுந்த இடுப்பு அளவிலான கங்கை வெள்ள நீரில் புனித நீராடுவதும் இணையத்தில் வைரலாகிவருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ், தாரகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாத். இவர் அந்தப் பகுதி காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். தொடர் கனமழையின் காரணமாக கங்கையில் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்துவருகிற நிலையில், நிஷாத் வீட்டின் வெளியேயும் வெள்ள நீர் சூழ்ந்தது.
அனைவரும் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல, நிஷாத் கங்கை நதியே தன் வீட்டிற்கு வந்ததால், அதற்கு பால் ஊற்றி, பூவிட்டு வணங்கியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பூஜையின் போது அவர், “வாழ்க கங்கா தாயே, என் வீட்டு வாசலுக்கே வந்து எனக்கு நீ ஆசிர்வாதம் வழங்குவதை நான் பாக்கியமாக உணர்கிறேன். வாழ்க கங்கா தாயே” என சொல்வதும் கேட்கிறது.
இதேபோல், மற்றொரு வீடியோவில், தன் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து இடுப்பு அளவுக்கு இருக்கிறநிலையில், அந்த நீரில் அவர் நீராடுகிறார். தற்போது இந்த இரண்டு காணொளிகளும் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
August 04, 2025 1:04 PM IST


