Last Updated:
மகாராஷ்டிர பால்கர் மாவட்டத்தில், சுடுகாட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேய் வேஷம் போட்டு இளைஞர்கள் நகராட்சி அலுவலகத்திற்குவந்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய்-விரார் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சியின் சார்பில் மக்கள் நலன் சார்ந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் வசாய் பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படும் வகையில் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திறந்தவெளி மைதானம் மற்றும் திறந்தவெளி ஜிம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரணம், திறந்தவெளி ஜிம் என்பது, மக்கள் செல்ல அச்சப்படும் சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ளது தான். இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் மயானத்திற்கு அருகிலேயே எப்படி உடற்பயிற்சி செய்ய முடியும் என்று கேள்வி கேட்டு பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.
அத்துடன், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க இளைஞர்கள் சிலர் விநோத முறையைப் பின்பற்றியுள்ளனர். பேய்களின் ஆரோக்கியத்திற்காகவா சுடுகாட்டில் ஜிம் அமைக்கப்பட்டது என்று கேள்வி கேட்கும் வகையில், பேய் வேஷம் போட்டு இளைஞர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
அத்துடன், கையில் பூங்கொத்துடன் சென்று பேய்களுக்கு ஜிம் அமைத்ததற்கு நன்றி என தெரிவிக்கும் வகையில் அதிகாரிகளின் கையில் கொடுத்தனர். வஞ்சப்புகழ்ச்சியாக இளைஞர்கள் தங்களை கலாய்க்கிறார்கள் என்பதை அறியாமல், நகராட்சி அதிகாரிகளும் வாய் விட்டு சிரித்தனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுடுகாட்டில் நிறுவப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களை, வேறு இடத்தில் மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் நலனுக்கான திட்டங்களை அதிகாரிகள் நிறைவேற்றும் போது கடமைக்காக அல்லாமல், அவற்றை பொறுப்புணர்வுடன் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரியுள்ளனர்.
August 04, 2025 5:39 PM IST
உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு… பேய் வேஷம் போட்டு அதிகாரிகளை அலறவிட்ட இளைஞர்கள்


