ஷா ஆலம்,
சிலாங்கூர் வருகைதரும் ஆண்டு (TMS2025) ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்த சிலாங்கூர் மராத்தான் (SELMAR) 2025 இன்று சிறப்பாக நடைபெற்றது. சிப்பாங் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் (SIC) நடைபெற்ற இந்த மராத்தானில் 11 நாடுகளைச் சேர்ந்த 7,000 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி 42 கிமீ, 21 கிமீ, 10 கிமீ, 5 கிமீ மற்றும் சிறுவர் பிரிவுகளாக ஐந்து வகைப்படப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த மராத்தான் நிகழ்வை சுற்றுலா சிலாங்கூர் நிறுவனம், சிப்பாங் நகராட்சி மன்றம் (MP Sepang) மற்றும் SIC உடன் இணைந்து ஏற்பாடு செய்தது.
“SELMAR நிகழ்வு, விளையாட்டு சுற்றுலாவை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தின் திறனை உலகிற்கு காட்டும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இது சிலாங்கூர் அரசு TMS2025 இனை வெற்றிகரமாக முன்னெடுத்துவந்ததைக் குறிக்கிறது.” என
சுற்றுலா எக்ஸ்கோ டத்தோ ‘இங் சுயி லிம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் MP Sepang தலைவர் டாக்டர் அனி அகமது மற்றும் சுற்றுலா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சிலாங்கூர் மாநிலம் 2025 ஆம் ஆண்டிற்குள் 8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் RM11.7 பில்லியன் வர்த்தக வருமானம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TMS2025 இன் கீழ் 60க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழல், வேளாண்மை, கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.




