Last Updated:
சமூக ஊடகங்களில் பதிவிட்டு லைக்குகளை பெறுவதற்காக, அன்றாட வாழ்வில் என்ன நடந்தாலும் அதனை வீடியோ எடுத்து அதன் மூலம் புகழடைய நினைக்கும் மனப்பான்மை பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்பங்களின் பயன்பாடு புதியதொரு உச்சத்தை தொட்டிருக்கும் இன்றைய நிலையில், அவற்றால் எந்த அளவிற்கு நன்மைகள் கிடைக்கின்றனவோ, அதே அளவிற்கு அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு லைக்குகளை பெறுவதற்காக, அன்றாட வாழ்வில் என்ன நடந்தாலும் அதனை வீடியோ எடுத்து அதன் மூலம் புகழடைய நினைக்கும் மனப்பான்மை பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
மேலும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்ட இடங்களுக்குச் சென்று அவற்றை படம்பிடித்து அதனை ஒரு சாகசமாக கருதி புகழடைய நினைப்பவர்களும் உண்டு. ஆனால், இது ஒரு எல்லைக்கு மேல் சென்று மற்றவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுவதாக அமைவதுதான் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலில் யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடியைக் கொண்டு வீடியோ எடுக்க முயற்சித்த நபரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து, அவரை கோயிலில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.
புவனேஷ்வரை சேர்ந்த அபிஷித்கார் என்னும் பெயருடைய நபர் செயலில் ஈடுபட்டுள்ளார். கோயில் நுழைவாயிலில் இவரின் வித்தியாசமான நடவடிக்கையை பார்த்த கோயிலின் பாதுகாப்பு அதிகாரிகள், இவரை விசாரித்ததில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை கொண்டு இவர் கோயிலை வீடியோ எடுக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரிடமிருந்து கண்ணாடியை பறிமுதல் செய்துள்ளனர்.
கிடைத்துள்ள தகவலின்படி, அபிஷித் ரே-பான் மெட்டா வேஃபாரர் மாடல் கண்ணாடியை அணிந்து வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளார். ரூ.30,000 மதிப்புடைய இந்த கண்ணாடியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவை கொண்டு வீடியோ எடுப்பதோடு மட்டுமல்லாமல் அதனை நேரடியாக மற்றொரு மொபைல் போன் அல்லது சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பவும் முடியும்.
பூரி ஜெகன்நாதர் கோயிலில் புகைப்படம் எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே அதற்கான எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. அதில் கோயிலின் உள்ளே மொபைல் போன் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என்ற வாசகங்களை நம்மால் தெளிவாக பார்க்க முடியும். ஒருவேளை இந்த விதிமுறைகளை மீறுபவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும்.
“ஒரு மனிதர் தன்னுடைய கண்ணாடியில் ரகசிய கேமராவை கொண்டு கோயிலை படம்பிடிப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, நாங்கள் விசாரணை செய்து அந்த நபரை கண்டறிந்து அவரிடம் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடியை பறிமுதல் செய்துள்ளோம்” என்று பூரியின் காவல்துறை கண்காணிப்பாளர் சுஷில் மிஸ்ரா தெரிவித்துள்ளார். பிடிபட்ட அந்நபரை காவல்துறை அதிகாரிகள் கோயிலின் வெளியே அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
Odisha (Orissa)
August 03, 2025 10:55 AM IST
ரகசிய கேமரா பொருத்திய கண்ணாடி மூலம் பூரி ஜெகன்நாதர் கோயிலை வீடியோ எடுத்த நபர்… காவல்துறை நடவடிக்கை என்ன…?


